வல்லூர் அனல்மின் நிலையத்தில் 2 யூனிட்டுகள் பழுது... 1000மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு
திருவள்ளூர்: வல்லூர் அனல்மின் நிலையத்தில் இரண்டு யூனிட்டுகளில் பழுது ஏற்பட்டுள்ளதால், 1000மெகா வாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தேசிய அனல்மின் கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் நிறுவப்பட்டுள்ளது வல்லூர் அனல்மின் நிலையம். இங்குள்ள 3 யூனிட்டுகளில் 500மெகா வாட் விகிதம் 1500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் முதல் யூனிட்டில் கொதிகல குழாயில் கசிவு ஏற்பட்டது. அதன் காரணமாக 500மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. கடந்த 4ம் தேதி மூன்றாவது யூனிட்டில் கொதிகல குழாயில் ஏற்பட்ட கசிவால் மின் உற்பத்தி பழுது சிரி செய்யப்பட்டு நேற்று மீண்டும் தொடங்கப்பட்டது.
ஆனால் டர்பன் குழாயில் நீர் கலந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த யூனிட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் இரண்டாவது யூனிட்டில் மட்டும் 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இரண்டு யூனிட்டுகளில் பழுது ஏற்பட்டுள்ளதால் 1000 மெகா வாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பழுதை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வட சென்னை மற்றும் வல்லூர் அனல் மின் நிலையங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கப் படுகிறது. எனவே, இது தொடர்பாக முழு ஆய்வு செய்து தங்கு தடையின்றி மின் உற்பத்தி நடைபெற தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.