Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1650 கோடி கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை.. செயலிழந்துள்ள தமிழக அரசு… மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

கரும்பு விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கோரியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கரும்பு விவசாயிகளுக்கு 1650 கோடி ரூபாய் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனை வழங்காமல் தமிழக அரசு செயலிழந்துள்ளது என்று திமுக பொருளாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Settle dues to sugarcane farmers: MK Stalin

தமிழகத்தில் வேளாண் சார்ந்த தொழிற் பயிற்களில் கரும்பு இரண்டாவது இடத்தை வகிக்கிறது. ஆனால் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களுக்குரிய நிலுவைத் தொகை கிடைக்காமல் தவிக்கும் நிலை அதிமுக அரசில் உருவாகியிருக்கிறது. தனியார் சர்க்கரை ஆலைகள் 1650 கோடி ரூபாய்க்கு மேல் கரும்பு விவசாயிகளுக்கு நிலுவையில் வைத்திருப்பதால், அவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று வருடங்களாகவே தங்களின் நிலுவைத் தொகையை தரக் கோரி பல்வேறு போராட்டங்களை கரும்பு விவசாயிகள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக சமீபத்தில் சென்னையில் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி கரும்பு விவசாயிகள் கைதும் ஆனார்கள். இதன் பிறகு "தனியார் சர்க்கரை ஆலைகளில் உள்ள நிலுவைத் தொகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்படும்" என்று அதிமுக அரசு கரும்பு விவசாயிகளுக்கு உத்தரவாதம் அளித்தது. அதை நம்பி போராட்டத்தை தள்ளி வைத்த கரும்பு விவசாயிகள் 3.11.2016 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட பேச்சுவார்த்தையில் இனிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் கரும்பு விவசாயிகளின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாறாக அந்த பேச்சுவார்த்தை திடீரென்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வேறு எந்த தேதியில் இந்த பேச்சுவார்த்தை நடக்கும் என்பதும் அறிவிக்கப்படவில்லை.

தமிழகத்தில் 43 சர்க்கரை ஆலைகள் இருக்கின்றன. அதில் 25 தனியார் சர்க்கரை ஆலைகளும், 16 அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும், 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளும் உள்ளன. அரசுத் தரப்பில் தனியார் சர்க்கரை ஆலைகளில் உள்ள நிலுவைத் தொகை பற்றி பேச்சுவார்த்தை நடத்துவோம் என்ற உத்தரவாதமும் கைவிடப்பட்டுள்ளது. அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் 200 கோடி ரூபாய்க்கு மேல் இன்னும் நிலுவையில் உள்ளதை வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லை. தனியார் சர்க்கரை ஆலைகளிடம் நிலுவைத் தொகையை கரும்பு விவசாயிகளுக்கு பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருப்பது போல் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் உள்ள நிலுவை தொகையை வழங்க வேண்டிய பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது. ஆகவே தனியார் சர்க்கரை ஆலைகளுடனான பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தவும், அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் மீதியுள்ள நிலுவை தொகையை உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவும் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இன்றைக்கு ஏறக்குறைய 2 லட்சத்து 57 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் உள்ள கரும்பு சாகுபடியை காப்பாற்ற 1969ஆம் ஆண்டில் தனியாக "சர்க்கரை துறை"யையும், 1974 ஆம் ஆண்டில் தமிழ்நாடு சர்க்கரைக் கழகத்தையும் தலைவர் கலைஞர் தலைமையில் இருந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சிதான் உருவாக்கியது என்பதை இந்த நேரத்தில் பெருமையுடன் பதிவு செய்ய விரும்புகிறேன். அந்த சர்க்கரைத் துறை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்குரிய நிலுவைத் தொகையைப் பெற்றுத் தராமல் இன்றைக்கு செயலிழந்து நிற்பது வேதனையாக இருக்கிறது. ஆகவே இனியும் கால தாமதம் செய்யாமல், இடைத்தேர்தல் போன்ற காரணங்களைச் சொல்லிக் கொண்டிருக்காமல் கரும்பு விவசாயிகளை அழைத்துப் பேசி அவர்களுக்கு தனியார் சர்க்கரை ஆலைகளிலும், அரசு கூட்டுறவு ஆலைகளிலும் நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக வழங்க அதிமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+