தமிழகம் முழுவதும் உரத்தட்டுப்பாடு: கலக்கத்தில் விவசாயிகள்: ஆனால், தொடர்ந்து ஜெ, சோகத்தில் அரசு!
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை சரியான நேரத்தில் தொடங்கி பெய்து வருவதால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் விவசாயப் பணிகளைத் தொடங்கினர்.
தற்போது யூரியா தட்டுப்பாடு தலைவிரித்தாடுவதால், தாளடி, சம்பா நெற்பயிர்கள் தழைச்சத்து இல்லாமல் நோஞ்சான்களாகக் காட்சி அளிக்கின்றன. இதனால், விவசாயிகள் பெரும் வேதனையில் மூழ்கியுள்ளார்கள்.
உரத்தட்டுப்பாடு காரணமாக தனியார் உர நிறுவனங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர். இதனால் விவசாயிகள் கடுமையான வேதனைக்கு ஆளாகியுள்ளனர். பயிரை ஆரோக்கியமாக வளர்த்து காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ? என்ற மனஉளைச்சல் அவர்களை வாட்டி வதைக்கிறது.
உரத்தட்டுப்பாடு
உர நிறுவனங்கள் தொழில்நுட்ப காரணங்களால் உர உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல பகுதிகளில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தனியார்கள் கொள்ளை
மேலும் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு மையங்களிலும் உரங்கள் போதிய இருப்பு இல்லாத காரணத்தால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். உரத்தட்டுப்பாடு காரணமாக வெளிச்சந்தையில் தனியார் நிறுவனங்கள் உரங்களை கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.
வேளாண் விற்பனை மையங்களில்
எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு வேளாண் மையங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களிலும் மத்திய, மாநில அரசுகள் போர்கால நடவடிக்கை எடுத்து உரத்தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்ப்பார்கின்றனர்.
நெல்லை தூத்துக்குடியில்
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரளவுக்கு நல்ல மழை பெய்தது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு பிசான சாகுபடிக்காக விவசாயிகள் தயாராகி வருகின்றனர்.
பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் விவசாயிகள் நற்றங்கால் நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில இடங்களில் நடுவை பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை உரங்கள் விலை அதிர்ச்சியுள்ளது.
பதுக்கும் தனியார்
உர விற்பனையாளர்கள் அவற்றை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்து விட்டு தாறுமாறாக விலையை ஏற்றி விற்பனை செய்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் தற்போது யூரியா தட்டுபாடாக இருப்பதால் தனியார் உரக்கடைகள் வைத்ததை சட்டமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.
தாறுமாறாக விலை உயர்வு
50 கிலோ கொண்ட ஒரு மூட்டை யூரியா விலை தற்போது 450 ரூபாய் அளித்தாலும் யூரியா கிடைக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதன் சாதாரண விலை ரூ.270தான் என்பது குறிப்பிடத்தக்கது. பாக்டம்பாஸ் ஒரு மூட்டை ரூ.820க்கு பதிலாக ரூ.1500க்கு விற்கப்பட்டு வருகிறது.
தினசரி விசாரணை
அம்பை, தென்காசி, கடையநல்லூர், வள்ளியூர், சங்கரன்கோவில் என பல்வேறு வட்டாரங்களில் விவசாயிகள் உரக்கடைகளுக்கு தினமும் சென்று உர விலையை விசாரித்து செல்லும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
விவசாயம் பாதிப்பு
தற்போது நல்ல மழை பெய்துள்ள நிலையில் யூரியா தட்டுபாடால் அவற்றை பயன்படுத்தி விவசாயம் செய்ய முடியாமல் போய் விடுமோ என விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
இதேபோல புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் யூரியா உரத்தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.
உரத்தட்டுப்பாடு ஏன்?
உர விற்பனை நிலையங்கள் நேரடியாக உரம் உற்பத்தி செய்து வந்தார்கள். இந்த நிறுவனங்கள் பயோ கேஸ் மூலம் உற்பத்தியில் இறங்கின. ஆனால் கேஸ் தட்டுப்பாடு காரணமாக அவர்களால் போதிய அளவு உரங்களை உற்பத்தி செய்ய முடியவில்லை. இதனால் தான் தற்போது தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்கிறார் வணிகர் சங்கங்களின் மாநில அமைப்புச் செயலர் லெ. கைலாசநாதன் கூறுகிறார்.
எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் வேளாண்மை கூட்டுறவு மையங்களுக்கு தேவையான அளவு உரம் விநியோகம் செய்து விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் கைலாசநாதன் கூறினார்.
செயலற்றுப்போன அரசு
ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிக்கி சிறைக்குப் போனதில் இருந்தே தமிழக வேளாண் துறையும், கூட்டுறவுத் துறையும் செயலற்றுக் கிடக்கிறது என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டாகும். இதனால்தான், யூரியா தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. இதை கள்ளச்சந்தை வியாபாரிங்க பயன் படுத்திக்கிட்டாங்க.
வழக்கமா 50 கிலோ யூரியாவோட உண்மையான விலை 272 ரூபாய்தான். இப்ப 350 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யுற கொடுமை நடப்பதற்குக் காரணம் என்கின்றனர்.
தாண்டவமாடும் உரத்தட்டுப்பாடு
''தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் தாளடி, சம்பா சாகுபடிக்கு குறைந்தபட்சம் 2 லட்சம் டன் யூரியா தேவை. யூரியா தயாரிக்க தேவையான நாஃப்தாவை, மத்திய பெட்ரோலிய அமைச்சகம்தான், சலுகை விலையில் உரத் தொழிற்சாலைங்களுக்கு வழங்கியது. ஆனால், பாஜக அரசு அதை நிறுத்தியதால், தமிழகத்தில் உள்ள மெட்ராஸ் உரத் தொழிற்சாலை, ஸ்பிக் உரத் தொழிற்சாலை, கர்நாடகாவில இருக்குற மங்களூர் உரத் தொழிற்சாலை என அனைத்திலும் யூரியா உற்பத்தி நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் இந்தியா முழுவதுமே உரத் தட்டுப்பாடு தாண்டவமாடப்போகிறது என்பது விவசாயிகளின் எச்சரிச்கையாகும்.
உர விற்பனையாளர்கள்
இப்கோ, ஸ்பிக், டபிள்யூ.சி.எப்., ஆர்.சி.எப். உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தமிழகத்திற்கு ரசாயன உரங்களைத் தயாரித்து விநியோகிக்கின்றன. இதில் ஆர்.சி.எப் நிறுவனத்தின் உரத்தின் அடக்க விலையே ஒரு மூட்டை ரு.300க்கு மேல்தான் கிடைக்கிறது என்பது உர விற்பனையாளர்களின் புகாராகும். எனவேதான் போக்குவரத்து, ஏற்றுக்கூலி, இறக்குகூலி அனைத்தும் சேர்த்து ரூ.350க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.