கருப்புப் பணம் அனைத்தும் தங்க நாணயங்களாக மாற்றப்பட்டுவிட்டன: சீதாராம் யெச்சூரி பொளேர்
கருப்புப் பணம் அனைத்தும் தங்க நாணயங்களாக மாற்றப்பட்டுவிட்டதாக சீதாராம் யெச்சூரி சாடியுள்ளார்.
நெல்லை: கருப்புப் பணம் அனைத்தும் தங்க நாணயங்களாக மாற்றப்பட்டுவிட்டன; நகைக் கடைகளை விடிய விடிய திறக்க யார் அனுமதி கொடுத்தது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி சாடியுள்ளார்.
நெல்லையில் இன்று செய்தியாளர்களுக்கு சீதாராம் யெச்சூரி அளித்த பேட்டி:
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனை, ரயில் நிலையங்களில் டிசம்பர் 31-ந் தேதி வரை பழைய ரூ500, ரூ1,000 நோட்டுகளை வாங்க வேண்டும்.
கருப்புப் பணத்தைதான் அனைவரும் தங்க நாணயங்களாகவே மாற்றிவிட்டனர். நகைக் கடைகளை விடிய விடிய திறந்து வைக்க யார் அனுமதி கொடுத்தது?
ரூபாய் நோட்டு பிரச்சனையை நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் எழுப்புவோம். புதிய ரூ2,000 நோட்டுகளால் ஊழலையும் லஞ்சத்தையும் ஒழித்து விட முடியாது.
கருப்பு பண மீட்பு நடவடிக்கையில் தோல்வி அடைந்துவிட்டதை திசை திருப்பும் வகையில்தான் மோடியின் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.
இவ்வாறு சீதாராம் யெச்சூரி கூறினார்.