10ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது
மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பூவந்தி காவல்நிலைய இன்ஸபெக்டர் நாசர் 10ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
திருப்புவனம் அருகே மணல்மேடு கிராமத்தைச் சேர்ந்த மலைச்சாமி மகன் நடுக்காட்டான்(45). இவர் வெளிநாடு செல்வதற்காக மும்பையைச் சேர்ந்த ஏஜெண்ட் ஒருவரிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கொடுத்து இருந்தார்.
விசா பெறுவதற்காக போலீசாரிடம் தடையில்லா சான்று தேவைப்பட்டது. அதற்காக பூவந்தி போலீஸ் ஸ்டேசனில் விண்ணப்பம் செய்தார். ஆனால் நடுக்காட்டான் மீது கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி தேவர் குருபூஜையின் போது மணல்மேடு கிராமத்தில் அரசு டவுன்பஸ் மீது கல் வீசிய வழக்கு உள்ளது.
இதில் கைது செய்யப்ப்டடு ஜாமீனில் உள்ளார். எனவே வழக்கை மறைத்து சான்று தருவதற்காக 20ஆயிரம் ரூபாய் இன்ஸ்பெக்டர் நாசர் கேட்டுள்ளார். கடைசியில் 15ஆயிரம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி வெங்கடேஸ்வரனிடம் புகார் செய்தார். இதனையடுத்து நேற்று மாலை 4மணிக்கு ரசாயனம் தடவிய லஞ்ச பணத்தை பூவந்தியில் உள்ள நாசரின் வீட்டில் சென்று கொடுத்த போது பின் தொடர்ந்து சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கைது செய்தது. மேலும் கோயம்புத்தூரில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.
இது குறித்து நடுக்காட்டான் கூறும் போது பணம் கேட்டு வீட்டிற்கு அடிக்கடி வந்து தொல்லை கொடுத்தார். ஒருமாதமாக என்னை டார்ச்சர் செய்ததால் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் செய்தேன் என்றார்.
இதற்கு முன் ஊட்டியில் இன்ஸ்பெக்டராக நாசர் பணியாற்றியுள்ளார். அங்கும் அவர்மீது பல்வேறு புகார்கள் உள்ளதாக கூறப்படுகிறது.