சிவகாசி: பட்டாசு ஆலைகள் ஏப்.5 முதல் கால வரையற்ற வேலை நிறுத்தம் … தொழிலாளர்கள் கவலை
சிவகாசி: சிவாகாசியில் உள்ள பட்டாசு ஆலைகள் ஏப்ரல் 5ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 570 பட்டாசு ஆலைகள் உள்ளன. இதில் 30 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
கடந்த சில வருடங்களாக சீனாவிலிருந்து 200 கன்டெய்னர்களில் இறக்குமதி பட்டாசுகள் செய்யப்பட்டது. இதனை கண்டித்து பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

பட்டாசு குடோன்களின் உரிமத்தை புதுபிக்க கட்டண தொகையான ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ. 4 லட்சமாக உயர்த்தியதையும், போர்மேன் தகுதி சான்று கட்டணம் ரூ.100லிருந்து ரூ.3000 ஆயிரமாக உயர்த்தியதையும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
வேலை நிறுத்தம்
ஆலைகள் தொடர்ந்து இயங்க அதிகாரிகள் மேற்கொள்ளும் வசூல் வேட்டையை தடுத்து நிறுத்தக்கோரியும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக பட்டாசு ஆலைகள் நிர்வாகிகள் சங்க தலைவர் சி.சண்முகம் கூறியுள்ளார்.
லாரி உரிமையாளர்கள் ஆதரவு
இந்த போராட்டத்துக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் பட்டாசு சில்லரை விற்பனையாளர்கள் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சீன பட்டாசுக்கு வரவேற்பு
இதனிடையே சிவகாசி பகுதி பட்டாசு உற்பாத்தியாளர்கள் கூட்டம் சிவகாசி டான்பாமா அரங்கின் மேடையிலேயே சீன பட்டாசுகளை அடுக்கியிருந்தார்கள்.
அங்கு பேசிய பலரும் தடை செய்யப்பட்டுள்ள சீனப் பட்டாசுகள் இந்தியாவிற்குள் வந்தது எப்படி?" என்று கேள்வி எழுப்பினார்கள்.
காங்கிரஸ் அரசுக்கு எதிர்ப்பு
சீனப்பட்டாசுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து உள்ளூர்த் தொழிலுக்கு மூடுவிழா காணத் துடிக்கிறது மத்திய காங்கிரஸ் அரசு எனவும் அந்தக் கூட்டத்தில் பேசிய பலரும் சீறி வெடித்தார்கள்.
கடும் நெருக்கடி
வருடத்திற்கு ரூ.15000 என்று இருந்த பட்டாசு ஆலை உரிமக் கட்டணத்தை யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல், ரூ.4,00,000 என்று 27 மடங்கு உயர்த்திவிட்டார்கள். உள்நோக்கத்துடன் பட்டாசுத் தொழிலுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ் கட்சி இனி ஆட்சிக்கு வரக் கூடாது.
பட்டாசு கடைகளும் மூடப்படும்
ஆட்சி மாற்றம் நிச்சயம் வேண்டுமென்று ஒரு முடிவோடு பேசிய பட்டாசு உற்பத்தியாளர்கள், வரும் 6-ஆம் தேதியிலிருந்து பட்டாசு ஆலைகள், பட்டாசுக் கடைகள், டிரான்ஸ்போர்ட் அலுவலகங்கள் என அனைத்தும் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று, அந்தந்த சங்கத்தினர் கடையடைப்புக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக உறுதி கூறினர்.
தொழிலாளர்கள் தவிப்பு
காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications