ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களா அருகே ஆண் எலும்புக்கூடு- போலீஸ் விசாரணை
ஜெயலலிதாவிற்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா அருகே ஆண் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா அருகே எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எலும்புக்கூடை கைப்பற்றிய திருப்போரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருப்போரூர் அடுத்த சிறுதாவூரில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, அந்த பங்களாவில், அவரது தோழி சசிகலாவுடன் சென்று தங்குவார். கடந்த சில ஆண்டுகளாகவே அந்த பங்களாவிற்கு ஜெயலலிதா செல்வதில்லை.
கடந்த ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அந்த பங்களாவில் இருந்து கண்டெய்னர்களில் பணம் கடத்தப்படுவதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவால் ஜெயலலிதா பாதிக்கப்பட்டு அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். இதனையடுத்து சிறுதாவூர் பங்களாவின் பக்கம் யாருமே செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

தீ விபத்து
கடந்த மாதம், சிறுதாவூர் பங்களாவில் நிறுத்தப்பட்டு இருந்த போலீசாரின் வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனையடுத்து சிறுதாவூர் பங்களா பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. வாகனம் தானாக தீ பிடித்ததா? அல்லது எதையாவது ஆவணங்களை போட்டு எரித்தார்களா என்ற சந்தேகமும் எழுந்தது.

எலும்புக்கூடு
இந்த நிலையில் சிறுதாவூர் பங்களாவை ஒட்டி தனியாருக்கு சொந்தமான லேஅவுட் உள்ளது. இந்த மனை பிரிவையொட்டி எலும்பு கூடுகள் இருப்பதாக, திருப்போரூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து மாமல்லபும் டிஎஸ்பி , திருப்போரூர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

ஆண் சடலம் யாருடையது?
ஒரு ஆண் சடலத்தின் எலும்புக்கூடு காணப்பட்டது. அதில் நீல நிற சட்டை, பச்சை நிற டவுசர் உடன் மக்கிய நிலையில் போலீசார் மீட்டனர். அந்த எலும்புக்கூடை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை
சடலமாக கிடந்தவரின் சட்டையில் உள்ள டெய்லரின் முகவரியை வைத்து விசாரித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் பங்களா அருகே எலும்புக்கூடு இருந்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பங்களாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கொடநாடு மர்மம்
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் பாதுகாப்பில் ஈடுபட்ட காவலாளி கடந்த ஏப்ரல் மாதம் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் இதுவரை 10 பேர் வரை கைது செய்துள்ளனர். அந்த மர்மம் விலகாத நிலையில் சிறுதாவூர் பங்களா அருகில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications