அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்.. சாம்சங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது தமிழக அரசு
அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட்டுள்ளது.
சென்னை: அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைப்பது தொடர்பாக சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணாக்கர்கள் போதிய கணினி திறன்களை அடையும் வகையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும்.

அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத் திறன் வகுப்பறை, அதாவது ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்தப்படும் என்று சமீபத்தில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் அறிவித்தார்.
இந்நிலையில் அரசு மாநகராட்சி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்க சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் தமிழக அமைச்சர்கள் செங்கோட்டையன், வேலுமணி, சம்பத் ஆகியோர் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.
தமிழக அரசும், சாம்சங் நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதன்படி முதல்கட்டமாக சென்னையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னையில் 20 மேல்நிலைப்பள்ளிகள், 8 நடுநிலைப் பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications