சென்னையில் அதிகாலை மூடுபனி… பகலில் கொளுத்தும் வெயில்: பரவும் வைரஸ் காய்ச்சல்
சென்னை: சென்னையில் அதிகாலை நேரத்தில் கடும்பனிபொழிவு காணப்படுவதால் வைரஸ்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
மார்கழி மாதம் தொடங்கியதில் இருந்தே பனிப்பொழிவு இருந்து வருகிறது. தை மாதத்தில் அது மேலும் அதிகரித்துள்ளது. இதனால் அதிகாலை நேரங்களிலும், இரவு 7 மணிக்கு பிறகும் சென்னையில் பொதுமக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
குறிப்பாக, மெரினா கடற்கரையில் அதிகாலை நடைபயிற்சி, ஓட்டப் பயிற்சி செய்பவர்கள், காலை 7 மணிக்கு பிறகே வருகின்றனர். அதேநேரம் காலை 9 மணிக்கு மேல் சென்னையில் வெயில் வறுத்தெடுக்க தொடங்கிவிடுகிறது.
மாறி மாறி தாக்குதல்
அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் கடும் பனி, இடைபட்ட நேரத்தில் கடும் வெயில் என சென்னை மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பனி, குளிர், கடும் வெயில் காரணமாக ஒருவிதமான காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.
வலியோடு காய்ச்சல்
முதியவர்கள், சிறுவர்கள் இந்த காய்ச்சலுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் காரணமாக கை, கால்களில் பயங்கர வலி, தொடர்ச்சியாக சளி, இருமல் ஏற்படுகிறது. இது ஒரு வாரம் வரை நீடிக்கிறது.
அலைமோதும் கூட்டம்
இதனால், தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் என்று வருபவர்களின் எண்ணிக்கை 2 மடங்காகிவிட்டது.
வானிலை ஆய்வு மையம்
இதனிடையே சென்னையில் ஒரு சில பகுதிகளில் அதிகாலை நேரங்களில் மூடுபனி நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவியது. மாநிலத்தில் எந்த ஒரு மாவட்டத்திலும் குறைந்த அளவு மழை கூட பதிவாகவில்லை என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
வறண்ட வானிலை
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் பொதுவாக வறண்ட வானிலை நிலவும். மலைப் பிரதேசமான நீலகிரியில் ஒரு சில பகுதிகளில் தரைப் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும் வாய்ப்புள்ளது.
பனியின் தாக்கம்
சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். இருப்பினும், மாநகரின் ஒரு சில பகுதிகளில் அதிகாலையில் மூடுபனியின் தாக்கம் தீவிரமாக இருக்க வாய்ப்புள்ளது.