மக்கள் உரிமைகளை வெளிப்படுத்தக் கூடாதா?... நீட் போராட்ட தடை குறித்து சமூக ஆர்வலர்கள் வேதனை!
நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருப்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
சென்னை : நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது, ஆனால் ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் இது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அனிதாவின் மரணத்தையடுத்து தமிழக்ததில் நீட் தேர்வை எதிர்த்து தமிழக மாணவர்கள் கொந்தளிப்பில் போராடி வருகின்றனர். இந்நிலையில் அரசியல் கட்சியினர், மாணவர்கள் என்று யாருமே போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
நீட் தேர்வை எதிர்த்து தொடர் போராட்டங்களை முன்எடுத்து வரும் மருத்துவர் எழிலன் இது குறித்து கூறியதாவது : நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்கிறார். காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, ஆனால் அதை செயல்படுத்தாமல் கர்நாடகா நீதிமன்ற அவமதிப்பை செய்து வருகிறது.
தமிழகமும் தொடரும்
காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கூறியுள்ளது, ஆனால் அதை நிறைவேற்றாமல் மத்திய அரசு நீதிமன்ற அவமதிப்பு செய்கிறது. கர்நாடகா, மத்திய அரசு ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பில் உள்ளது அதே போல தமிழகமும் நீதிமன்ற அவமதிப்பு தொடரும்.
ஆதிக்கம்
இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் பேச்சு சுதந்திரம், மக்கள் உரிமை என்ற அம்சத்தை உச்சநீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் தொடர்ச்சியாக நீட்டை திணிப்பதில் ஏன் இவ்வளவு கவனம் செலுத்தப்படுகிறது. அனிதாவின் தற்கொலை நடந்துள்ளதால் தன்னெழுச்சியாக மாணவர்கள் போராடி வருகின்றனர். போராட்டம் நடத்தக் கூடாது என்று சொல்வது நீதித்துறை ஆதிக்கம் என்றே நான் பார்க்கிறேன் என்று எழிலன் தெரிவித்துள்ளார்.
நியாயமா?
இதே போன்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியதாவது : ஜனநாயக நாட்டில் மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தும் அடிப்படை உரிமையை இந்திய அரசியலமைப்பு சட்டம் கொடுத்துள்ளது. ஒரு ஜனநாயக நாட்டில் உரிமையை வெளிப்படுத்த அடிப்படை உரிமை இருக்கும் போது அந்த உரிமையை நடைமுறைப்படுத்தாதே என்று சொல்வது எந்த வகையில் நியாயம் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை.
புரியவில்லை
அவசர காலத்தில் மட்டுமே அடிப்படை உரிமைகள் நிறுத்தி வைக்கப்படும், அப்படி அடிப்படை உரிமை இருக்கும் போது உச்சநீதிமன்றம் போராட்டம் நடத்தாதே என்று சொல்வது அரசியலமைப்பு சட்டத்தை எப்படி எடுத்துக் கொள்வது என்று புரிந்து கொள்ள முடியவில்லை. அரசியல் கட்சயின் பிரதான நோக்கமே மக்கள் கருத்துகளை அரசுக்கு தெரியப்படுத்துவது தான். ஒரு கட்சி மக்களின் கருத்தை பிரதிபலிக்கிறது அதை எப்படி தடை செய்ய முடியும் என்று தெரியவில்லை, இதற்கு அரசியல் கட்சிகள் என்ன செய்யப் போகின்றன என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.