ஆர்.கே நகர் தொகுதியில் இப்படியெல்லாம் கூட வேட்புமனுத் தாக்கல் செய்தார்கள்!
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சிலர் வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
Recommended Video

சென்னை : ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று நடிகர் விஷால், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர்.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக ஏற்கனவே அறிவித்து இருந்த ஆர்.கே நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. அதன்படி மீண்டும் ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் 21ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதில் போட்டியிட தி.மு.க சார்பில் மருதுகணேஷ், அ.தி.மு.க சார்பில் மதுசூதனன், டி.டி.வி தினகரன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்ய இன்றே இறுதி நாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

கடைசி ஆளாக வந்த தீபா
வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று நடிகர் விஷால் சுயேட்சையாகப் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளார். முன்னதாக இன்று காலை காமராஜர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்த விஷால், தான் அரசியலில் ஈடுபட அப்துல் கலாம், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரே காரணம் என்று உருக்கமாகக் குறிப்பிட்டு உள்ளார். ஜெயலலிதா அண்ணன் மகளான தீபா, இதிலேயும் கடைசி ஆளாக வந்து மனுத்தாக்கல் செய்தார். அப்போதே என்னுடைய மனு நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அவரே பேட்டியும் கொடுத்து சென்றார்.

அதிகாரிகளைத் தெறிக்கவிட்ட வேட்பாளர்
விஷால், தீபாவோடு சிலர் வித்தியாசமான முறையில் வந்து மனுத்தாக்கல் செய்துவிட்டு சென்றனர். அதிலும் குறிப்பாக வேலூர் நாட்ராம்பள்ளியைச் சேர்ந்த மனிதன் என்பவர், பின்நோக்கி நடந்து வந்தே மனுத்தாக்கல் செய்தார். அவரிடம் வயது குறித்து அதிகாரிகள் கேட்டபோது, 2கோடியே 14 லட்சத்து 49 ஆயிரத்து 668 என்று நிமிடக்கணக்கில் கூறி அதிகாரிகளையே அதிர்ச்சி அடைய செய்தார். மேலும், 26 வருடமாக இப்படி பின்நோக்கியே நடந்து சாதனை (!) படைத்து இருப்பதாகவும் குறிப்பிட்டார் மனிதன். மேலும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு தான் திருமணம் செய்ய இருப்பதாகவும் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

நூதன முறையில் வேட்புமனு தாக்கல்
ஆர்.கே.நகர் தொகுதியில் கோவையை சேர்ந்த நூர்முகமது என்பவர் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார். குதிரையில் அமர்ந்தபடி வலம் வந்த அவர் அதே தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்திற்கும் வந்தார். பின்னர் வேட்புமனு தாக்கல் செய்த பின்பு குதிரையில் கிளம்பிச் சென்றார் அந்த வேட்பாளர்.

டெங்கு நோய் விழிப்புணர்வு
ஆர்.கே.நகர் தொகுதியில் கோவையை சேர்ந்த தனலட்சுமி என்பவரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். அப்போது அவருடன் வந்தவர்கள் டெங்கு கொசு போலவும், டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பது போல வேடமணிந்தபடி குளுக்கோஸ் பாட்டிலை தூக்கியபடி நடித்துக் கொண்டே வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் தனலட்சுமியை மட்டும் வேட்புமனு தாக்கல் செய்ய அனுப்பி வைத்தனர். இப்படி வித்தியாசமான நபர்களால் தேர்தல் அதிகாரிகள் சற்று அதிர்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications