தென்னக ரயில்வே சார்பில் 9 புதிய ரயில்கள்: பொது மேலாளர் அறிவிப்பு
சென்னை: தெற்கு ரயில்வே சார்பில் 9 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தெற்கு ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ரயில்களின் கால அட்டவணை தயாரித்து தெற்கு ரயில்வே அறிவிக்கும். இந்த ஆண்டில் ஜூலை மாதம் வரையில் இருந்த கால அட்டவணையை செப்டம்பர் 30-ம் தேதி வரையில் நீடித்து உத்தரவிட்டு இருந்தது ரயில்வே நிர்வாகம்.
அதன்படி புதிய ரயில்வே கால அட்டவணையை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் வசிஷ்ட ஜோரி நேற்று வெளியிட்டார். இதில் 88 ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமேஸ்வரம், கூப்ளி, ஜோத்பூர் ஆகிய விரைவு ரயில்கள் அதி விரைவு ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன.
வேகம் அதிகரிப்பால் சென்னை எழும்பூர்- மானாமதுரை சிலம்பு விரைவு ரயில் பயண நேரம் 90 நிமிடங்களும், சென்னை- ஜோத்பூர் விரைவு ரயில்களின் பயண நேரம் 55 நிமிடங்களும், தஞ்சை- சென்னை உழவன் ரயில், சென்னை-ராமேஸ்வரம் ரயில் பயண நேரம் 90 நிமிடங்களும், ஹவுரா-குமரி ரயில், குருவாயூர்-சென்னை, தூத்துக்குடி-சென்னை ரயில் நேரம் 55 நிமிடங்களும் பயண நேரம் குறையும் எனவும் தெரிவித்துள்ளார்.
இத்துடன் தென்னக ரயில்வே சார்பில் 9 புதிய ரயில்களுக்கான அறிவிப்பையும் வெளியிட்டார். இதில் உதய் எக்ஸ்பிரஸ், அம்சப்பர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 9 புதிய ரயில்கள் அடங்கியுள்ளது.
இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் ஹம்சாபர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை புறப்பட்டு செல்லும். இந்த ரயில் விடப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். திருச்சி- ஸ்ரீகங்கா நகர் இடையே வாராந்திர புதிய ரயில் விடப்படுகிறது. இந்த ரெயில் திருச்சியில் இருந்து வியாழக்கிழமை தோறும் புறப்பட்டு செல்லும்.இந்த +ரயில் சேலம், நாமக்கல், கரூர், பங்காரு பேட்டை வழியாக செல்கிறது.
சென்னை சென்ட்ரல் - சந்திரகாசி இடையே வாராந்திர ரயில் விடப்படுகிறது. இந்த ரயில் புதன்கிழமை தோறும் சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு செல்லும். இந்த ரயில் சூலூர் பேட்டை, கூடூர், நெல்லூர், விஜயவாடா வழியாக செல்கிறது.
எர்ணாகுளம்- ஹவுரா அந்தோதியா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வாரம் ஒருமுறை விடப்படுகிறது. இந்த ரயில் எர்ணாகுளத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை தோறும் புறப்பட்டு செல்லும்.
கோயம்புத்தூரில் இருந்து கே.எஸ்.ஆர். பெங்களூருக்கு உதய் எக்ஸ்பிரஸ் புதியதாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும். திங்கட்கிழமை தவிர மற்ற நாட்களில் கோவையில் இருந்து புறப்பட்டு செல்லும். இதற்கான அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும்.
எர்ணாகுளம் - ஹட்டியா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வாரம் ஒரு முறை இயக்கப்படுகிறது. இந்த ரயில் எர்ணாகுளத்தில் இருந்து வியாழக்கிழமை தோறும் இயக்கப்படும்.
புவனேஸ்வர் - கிருஷ்ணா ராஜபுரம் இடையே வாராந்திர புதிய ரெயில் விடப்படுகிறது. இந்த ரெயில் திங்கட்கிழமை தோறும் புவனேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.
ஹவுரா - யஷ்வந்த்பூர் இடையே சூப்பர் பாஸ்ட் வாராந்திர ரயில் விடப்படுகிறது. இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தோறும் ஹவுராவில் இருந்து புறப்பட்டு செல்லும்.
கமக்யா- பெங்களூர் கண்டோண்ட்மென்ட் இடையே சூப்பர் பாஸ்ட் வாராந்திர ரயில் புதிதாக இயக்கப்பட உள்ளது. கமக்யாவில் இருந்து செவ்வாய்க்கிழமை தோறும் இந்த ரெயில் புறப்பட்டு செல்லும். புதிய ரயில் இயக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
அத்துடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு பத்து ரயில்கள் வந்து சேரும் நேரங்களும், ஆறு ரயில்கள் புறப்படும் நேரங்களும் மாற்றப்பட்டுள்ளன. இந்த நேர மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வரும்" என்று அவர் கூறினார்.