தூக்கியெறிய வேண்டும் இந்த மானம் கெட்ட துணை வேந்தர்களை.. உதயக்குமாரன் ஆவேசம்
சசிகலாவைப் பார்த்த பல்கலைக்கழக துணைவேந்தர்களை பதவியிலிருந்து தூக்கி எறிய வேண்டும் என்று பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயக்குமாரன் கூறியுள்ளார்.
சென்னை: சசிகலாவைப் போய்ப் பார்த்த பல்கலைக்கழக துணைவேந்தர்களை பதவியிலிருந்து தூக்கி எறிய வேண்டும் என்று பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப. உதயக்குமாரன் ஆவேசமாக கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது முகநூலில் அவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
மானம் கெட்ட கல்வியாளர்கள் என்றும் லஞ்சம் கொடுத்துப் பதவியைப் பெற்ற இவர்கள் அதிமுக ஆட்சி நீடித்தால் மேலும் காசு பார்க்க முடியும் என்பதற்காகவே இவ்வாறு சசிகலாவிடம் போய் நின்றுள்ளனர் என்றும் கடுமையாக தாக்கியுள்ளார்.
தமிழன் தரம் தாழ்ந்து போக இவர்களே காரணம்
உதயக்குமாரன் அறிக்கை: தமிழன் தரம் தாழ்ந்து போக முக்கிய காரணம் அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ அல்ல. இதோ இந்தப் படத்தில் நிற்கும் தரம்கெட்ட, மானம்கெட்ட கல்வியாளர்கள்தான். இந்தக் கூட்டம் ஐந்து கோடி, எட்டு கோடி என்று லஞ்சம் கொடுத்து துணை வேந்தர் பதவியைப் பெறுகிறார்கள். பின்னர் போகிறவன், வருகிறவனிடம் எல்லாம் காசு பிரிக்கிறார்கள்.
எந்த அடிப்படையில் சந்திக்கிறார்கள்
கல்வித் தரம் பற்றியோ, மாணவ மாணவியர் வருங்காலம் பற்றியோ கவலைப்படுவதில்லை. எந்த அடிப்படையில் இவர்கள் சசிகலா என்கிற தனிப்பட்ட நபரை சந்திக்கிறார்கள்? ஜெயலலிதா மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க வேண்டுமென்றால், கல்வி அமைச்சரைப் பார்க்கலாம், முதல்வரைப் பார்க்கலாம். சசிகலா ஆட்சி பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்களாம் இந்தக் கையாலாகாதவர்கள்.
ஆட்சி நீடித்தால்
இவர்களின் விருப்பம் அதிமுக ஆட்சி இன்னும் நான்கரை ஆண்டுகள் தொடர வேண்டும்; இவர்கள் தொடர்ந்து கொள்ளையடிக்க வேண்டும் என்பதுதான். அரசுப் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்கிற முறையில் ஆளுநர் இவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும், இவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவ,மாணவியரும் இவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும் என்று உதயக்குமாரன் கூறியுள்ளார்.
கையைக் கட்டி!
மொத்தம் 10 துணைவேந்தர்கள் போய் சசிகலாவைச் சந்தித்து கைகளைக் கட்டிக் கொண்டு அவர் முன் நின்றுள்ளனர். இவர்களுடன் அண்ணா பல்கலைக்கழக பதிவாளரும் போயுள்ளார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கவும், அவரது பொறுப்புகளை சசிகலா ஏற்க வேண்டும் என்றும் இந்தக் "கல்வியாளர்கள்" சசிகலாவைக் கேட்டுக் கொண்டனர் என்று நமது எம்ஜிஆர் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.
வணங்காமுடி
இந்தக் குழுவில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற துணைவேந்தர் பி. வணங்காமுடியும் ஒருவர். இவர் டிசம்பர் 10ம் தேதிதான் பணியிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அவர் கூறுகையில் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. தமிழகத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை தொடர வேண்டும் என்பதே எங்களது விருப்பம் என்றார் வணங்காமுடி.
மானம் உள்ளவர்களும் உண்டு
இந்தக் குழுவோடு சேர்ந்து போக வருமாறு சென்னை பல்கலைக்கழக பதிவாளர் டேவிட் ஜவஹருக்கும் அழைப்பு போனதாம். ஆனால் அவர்தான் முடியாது என்று கூறி நிராகரித்து விட்டாராம். இப்படிக் குழுவாகப் போவது அரசியலாகி விடும் என்பதால்தான் நான் போகவில்லை. அதை விட முக்கியமாக நான் ஒரு அதிகாரி. எந்த அரசியல் கட்சிக்கும் நான் சாதகமாக இருக்கக் கூடாது. நடுநிலை வழுவாமல் இருக்க வேண்டும். எனவேதான் அழைப்பை நிராகரித்து விட்டேன் என்றார் அவர்.
உலகத்தில் மானம் உள்ளவர்களும் சிலர் இருக்கிறார்கள்.. டேவிட் ஜவஹர் போல...!