புரியாமல் பேசும் விஜயகாந்த்... "ஸ்பீச் தெரபி" தரும் பிரேமலதா - பழைய பன்னீர் செல்வமாக வருவாரா?
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பேச்சு புரியாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் அவருக்கு ஸ்பீச் தெரபி தர பிரேமலதா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: கம்பீரக் குரலுக்கு சொந்தக்காரரான தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பேச்சு இப்போது பலருக்கும் புரியாமல் இருப்பதால் தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர். அவருக்கு பேச்சுப்பயிற்சி தர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுநீரகக் கோளாறு காரணமாக, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்தே ஆக்டிவ் பாலிடிக்ஸில் இருந்து விலகிவிட்டார் விஜயகாந்த்.
எப்போதாவதுதான் அவரைப் பொதுமேடைகளில் பார்க்க முடிகிறது. நோயின் தீவிரத்தன்மை காரணமாக, அவரால் தெளிவாகப் பேச முடிவதில்லை.
மக்கள் நலக்கூட்டணி தோல்வி
தற்போதுள்ள சூழலில் பழைய விஜயகாந்தாக இருந்திருந்தால், அவர் எதிர்பார்த்தபடி அரியணையை எட்டிப் பிடித்திருப்பார். மக்கள் நலக் கூட்டணியின் தோல்விகளும் கேப்டனின் உடல்நலக் கோளாறும் தேமுதிக என்ற கட்சியை மறக்கடிக்க வைத்துவிட்டன.
டயலாக் பேசிய விஜயகாந்த்
சினிமாவில் புள்ளி விபரத்தோடு பேசி அப்ளாஸ் அள்ளுவார் விஜயகாந்த். அதிரடியாக பேசுவது மட்டுமல்லாமல் காலால் உதைத்து எதிரிகளை துவம்சம் செய்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியவர் விஜயகாந்த். இன்றைக்கு உடல் நலக்குறைவினால் பேசவும் முடியாமல், சரியாக நடக்கவும் முடியாமல் தடுமாறுகிறார்.
போராடும் விஜயகாந்த்
இழந்த செல்வாக்கை மீண்டும் பெறும் முயற்சிகளில், விஜயகாந்தும் இறங்கியுள்ளார். இதற்காக, புதிய நிர்வாகிகளை நியமித்து, கட்சியை கட்டமைத்து உள்ளார். மக்கள் பிரச்னைகளுக்காக, போராட்ட களம் புகுந்துள்ளார்.
தொண்டர்கள் உற்சாகம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், டெங்குவால் பாதிக்கப்பட்டோரை, மருத்துவமனைக்கு சென்று, விஜயகாந்த் நலம் விசாரித்தார். இதனால் தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.
தொண்டர்களின் கவலை
விஜயகாந்தின் பேச்சில் உள்ள தடுமாற்றம் பல தொண்டர்களை உற்சாகம் இழக்கச் செய்து விட்டது. வெயிலோ, மழையோ கட்சியின் தலைவன் பேசினால் காத்திருந்து ரசிப்பார்கள். ஆனால் விஜயகாந்த் தனக்காக வெயிலில் காத்திருந்த ரசிகர்களுக்காக 10 நிமிடம் கூட தொடர்ச்சியாக பேசவில்லை. எனவே தொடர்ந்து பேசினால் மட்டுமே தொண்டர்களை தக்கவைக்க முடியும் என்கின்றனர்.
பிரேமலதா பேச்சுபயிற்சி
விஜயகாந்தின் நிலை பற்றி பலரும் பிரேமலதாவிடம் கவலை தெரிவிக்கவே, அவரது உடல் நிலையை சரி செய்யவும், அவரது குரலை சரி செய்யவும் விஜயகாந்துக்கு பேச்சு பயிற்சி தரவும் முடிவு செய்துள்ளாராம் பிரேமலதா. பேச்சுப்பயிற்சி முடிந்து விஜயகாந்த் பழைய பன்னீர் செல்வமாக திரும்ப வருவாரா பார்க்கலாம்.