ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார்: கலெக்டர்
திருச்சி: காலியாக உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ கூறியுள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 20 லட்சத்து 56 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஜெயஸ்ரீ வெளியிட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் 20 லட்சத்து 56 ஆயிரத்து 220 பேர் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 10 லட்சத்து 14 ஆயிரத்து 803 பேரும், பெண்கள் 10 லட்சத்து 41 ஆயிரத்து 330 பேரும் உள்ளனர். மேலும் 87 பேர் மற்றவர்கள் ஆவர்.
ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2 லட்சத்து 63 ஆயிரத்து 670. இதில் ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 29 ஆயிரத்து 912 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 33 ஆயிரத்து 645 பேரும் உள்ளனர். மற்ற வாக்காளர்கள் 13 பேரும் உள்ளனர்.
ஸ்ரீரங்கம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது''என்று கூறினார்.