ஜெயலலிதா நடத்தும் 'வீடியோ கான்பரன்ஸிங்' ஆட்சி… ஸ்டாலின்
ஒசூர்: தமிழ்நாட்டில் நடப்பது வீடியோ கான்பரன்ஸிங் ஆட்சி என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார்.
கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சின்னபில்லப்பாவை ஆதரித்து தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று தளி, தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், ஓசூர், கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை உள்பட பல இடங்களில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்
ஜெயலலிதாவின் 3 ஆண்டு கால ஆட்சியில், தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தலைவிரித்தாடிய தண்ணீர் பிரச்சினையை தீர்க்கவும், இம்மாவட்ட மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடனும் கடந்த தி.மு.க. ஆட்சியில் முதல்வர் கருணாநிதி 1928 கோடி மதிப்பீட்டில் ஜப்பான் வங்கி நிதியுதவியுடன், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தார்.
30 முறை ஆய்வு செய்தேன்
அவரது உத்தவுப்படி முழுவீச்சில் இதற்கான பணிகள் நடந்தன. 2012-ம் ஆண்டு இறுதிக்குள் திட்டத்தை செயல்படுத்தி தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு முழுமையாக தண்ணீர் வழங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தோம். நானே 30 முறை ஆய்வுப் பணிக்காக நேரில் வந்தேன். ஆனால் அ.தி.மு.க. அரசு இத்திட்டத்தை நிறைவேற்றவேயில்லை.
வீடியோ கான்பரன்ஸ் ஆட்சி
முதல்வர் ஜெயலலிதா சென்னை கோட்டையில் உட்கார்ந்து கொண்டு வீடியோ கான்பரன்ஸ் மூலம் திட்டத்தை தொடங்கி வைத்ததாக அறிவிப்பு வெளியிட்டதோடு சரி, 2 மாவட்ட மக்களுக்கு முழுமையாக தண்ணீர் கிடைத்ததா? அவர்களது தண்ணீர் பிரச்சினை தீர்ந்ததா? என்பதில் கவனம் செலுத்தவேயில்லை.
தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 2 மாவட்டங்களிலும் 99 சதவீத மக்களுக்கு இன்னும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் கிடைக்கவே இல்லை.
அம்மா குடிநீர்
இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்தி 2 மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதை விடுத்து இன்று தமிழக அரசே, 'அம்மா குடிநீர்' என்ற பெயரில் தண்ணீரை வியாபாரம் செய்து கொண்டிருக்கிறது.
சர்வாதிகார ஆட்சி
தமிழ்நாட்டில் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் சர்வாதிகார ஆட்சிக்கு, மக்களாகிய நீங்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும், அதற்கு இந்த தேர்தலை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
சாலை வழியாக சந்தித்தேன்
மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் இதுவரை 25 தொகுதிகளில் பிரசாரத்தை முடித்துள்ளேன். 149 சட்டமன்ற தொகுதிகளில் பேசியுள்ளேன். 5454 கிலோ மீட்டர் பயணம் செய்து பிரசாரம் செய்திருக்கிறேன். பெருமைக்காக சொல்ல வில்லை. ஜெயலலிதா போல் ஹெலிகாப்டரில் செல்லவில்லை. சாலை வழியாக சென்று மக்களை சந்திக்கிறேன் என்றார் ஸ்டாலின்.
கிழிந்த முகமூடி
பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை மூலம் இதுவரை மறைந்திருந்த பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது. அவர்களது முகமூடியும் கிழிந்துள்ளது.
சேது சமுத்திர திட்டம் எங்கே?
பா.ஜ.க. வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், இலங்கை பிரச்சினை குறித்து ஒரு வரிகூட இல்லை, அன்றாடம் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்களை காப்பது, அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து ஒரு வரிகூட இல்லை, சேது சமுத்திர திட்டம் குறித்து ஒரு வரியும் இல்லை.
சிறுபான்மையினருக்கு ஆபத்து
அது மட்டுமின்றி, அந்த தேர்தல் அறிக்கையில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவித்துள்ளனர். இதனால், சிறுபான்மை இன மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மதக்கலவரம்
400 ஆண்டு கால பழமை வாய்ந்த பாபர் மசூதியை இடித்து, மதவெறியை தூண்டி அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் கட்சிதான் பா.ஜ.க. என்பதை மக்கள் மறந்து விடக்கூடாது. பாபர் மசூதி இடிப்புக்குப்பின்னர் தான், நாட்டில் மதக்கல வரங்கள் ஏற்பட தொடங்கின. அன்று பாபர் மசூதி இடிக்கப் பட்டதை எதிர்த்து குரல் எழுப்பிய ஒரே தலைவர் கருணாநிதிதான்.
சந்தர்ப்பவாத கூட்டணி
தமிழ்நாட்டில் பா.ஜ.க. வுடன், பா.ம.க. ம.தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணிக்கு, தேர்தல் முடிவு கள் மூலம் மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.