குளம் தூர் வாருதல்... மரக்கன்றுகள் நடுதல் .. - தொடரும் ஸ்டாலினின் சமூக சேவை பணி
கோவில் குளத்தை தூர் வாரிய ஸ்டாலின், இப்போது மரக்கன்றுகளை நட்டு சமூக சேவை செய்யத் தொடங்கியுள்ளார்.
சென்னை : ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடக்கி வைத்தார்.
மரம் வளர்த்தால் தான் நாடு செழுமையடையும், போதிய மழை பெய்யும், மக்களும் வளமாக இருக்க முடியும் என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் கூறியதை ஏற்று சைதாப்பேட்டை தொகுதியில் வசிக்கும் அனைவரும் பங்கேற்கும் வகையில் அவரவர் பிறந்தநாளின் போது அவரவர் வசிக்கும் பகுதியில் நன்கு வளர்ந்த மரக்கன்றுகளை, பாதுகாப்பு வளையத்துடன் நட்டுத்தரும் சிறப்புத் திட்டம் ஜூலை 1ஆம் தேதியான இன்று முதல் தொடங்குகிறது.

ஒரு நாடு 33 சதவீத வனப்பரப்பு கொண்டிருக்க வேண்டிய நிலையில் தமிழகத்தில் 17.5 சதவீதமே, வனப்பரப்பு உள்ளது. சென்னையில் 6.5 சதவீதமே இருந்த பசுமைப் பகுதி சமீபத்திய 'வார்தா' புயலில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வீழ்ந்த நிலையில் 4.5 சதவீதமாக குறைந்து விட்டது.
உலகம் வெப்ப மயமாதல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, சென்னையில் பசுமையை மீண்டும் மீட்டெடுக்கும் வகையில் சென்னையில் மரக்கன்றுகளை நடும் விழா தொடங்கியுள்ளது. ஓராண்டிற்குள் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது.
அதிக உறுதித்தன்மை மிக்க வேப்பமரம், புங்கை, பூவரசு, அத்தி, நாவல் போன்ற பல்வேறு வகையான மர வகைகள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் சைதாப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ அலுவலகத்தை 9566209124, 9566209125 என்ற செல்போன் எண்களிலோ அல்லது நேரிலோ தொடர்பு கொண்டால் அவர்களிடம் உறுதிமொழி படிவங்கள் பெற்றுக்கொண்டு அவர்கள் வசிக்கும் பகுதியில் மரக்கன்று நட்டுத்தரப்படும்.
சைதாபேட்டையில் இந்த திட்டத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மரக்கன்றுகளை நட்டு விழாவை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் திரைப்பட நட்சத்திரங்களும் பங்கேற்றனர். மரக்கன்றுகளை சிறப்பாக பராமரிப்பவர்களுக்கு பசுமை பாதுகாவலர் என்ற விருது வழங்கப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சில மாதங்களாக கோவில் குளங்களை தூர் வாரிய ஸ்டாலின் தற்போது மரக்கன்றுகளை நடத்தொடங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications