ஒரு வாரத்திற்குள் தமிழக அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்.. ஆளுநருக்கு ஸ்டாலின் கெடு
சட்டசபையை ஆளுநர் ஒரு வார காலத்திற்குள் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக 119 எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் எனவே சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து வலியுறுத்தியுள்ளார் ஸ்டாலின்.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் இன்று ஆளுநரை சந்தித்து பேசினார். அப்போது மனு ஒன்றை அளித்தார்.
ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், அதிமுக எம்எல்ஏக்கள் 19 பேர் முதல்வருக்கு அளித்து வந்த ஆதரவினை திரும்ப பெற்றுள்ளனர். திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் 98 பேர் உள்ளனர்.
உடனே சட்டமன்றத்தை கூட்டுமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக 119 பேர் உள்ளனர். இந்த கணக்கை எடுத்து கூறியுள்ளோம்.
ஒரு வார காலத்திற்குள் ஆளுநர் சட்டசபை கூட்டுவார் என்று நம்புகிறோம். தற்போது 114 எம்எல்ஏக்கள் மட்டுமே எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிக்கின்றனர். எனவே ஆளுநர் நாங்கள் அளித்துள்ள மனுவை பரிசீலிப்பார் என்று நம்புகிறோம்.
இந்த பிரச்சினைக்காக ஆளுநரை சந்திப்பது இதுதான் கடைசி முறை. ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம். இல்லாவிட்டால் மக்கள் மன்றத்தை நாடுவோம் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.