மண்ணை விட்டு மறைந்தாலும் கவிதையாய் வாழ்க்கிறார் கவிக்கோ - ஸ்டாலின், வைகோ புகழாஞ்சலி
கவிக்கோ அப்துல் ரகுமான் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் கவிதையாய் வாழ்க்கிறார் என்று வைகோ, ஸ்டாலின் ஆகியோர் புகழாஞ்சலி செலுத்தியுள்ளனர்.
சென்னை: உடல்நலக்குறைவால் காலமான கவிக்கோ அப்துல் ரகுமான் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் கவிதையாக மக்கள் மனதில் வாழ்வார் என்று அரசியல் கட்சித்தலைவர்கள் புகழாஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கவிக்கோ அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "கவிக்கோ அப்துல் ரகுமானின் மறைவு செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். திமுக மீதும் கருணாநிதி மீதும் மிகுந்த பற்றுடன் இருந்தவர் அப்துல் ரகுமான். கருணாநிதி மீது மிகுந்த பாசத்துடன் இருந்தவர். அவரது 94வது பிறந்தநாளில் பங்கேற்க இருந்த நிலையில் இன்று காலையில் மரணமடைந்து விட்டார்.
தமிழுக்கு கவிக்கு வெகுமான இருந்தவர். அவரது தமிழ் என்றைக்கும் நிலைத்து நிற்கும். அவரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
ஸ்டாலினை தொடர்ந்து, மதிமுக பொதுச்செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவரது மறைவுக்கு இரங்கல்கள் தெரிவித்து வருகிறார்கள்.
கவிக்கோ அப்துல் ரகுமான் உடலுக்கு அஞ்சலி செலுத்திய வைகோ, மிகுந்த துயரமுற்றதாக கூறினார். கவிக்கோ இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், அவரது கவிதைகள் என்றென்றைக்கும் மறையாது என்றார் வைகோ. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்.
திமுக ராஜ்யசபா எம்பி கனிமொழியும் கவிக்கோ அப்துல் ரகுமான் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவு தமிழ் உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறினார் கனிமொழி.