“ஸ்டெம் செல்” தானமும் உயிர் காக்கும்- சென்னையில் பதிவேடு துவக்கம்!
சென்னை: ஜீவன் ரத்த வங்கியின் சார்பில் உயிர் காக்க உதவும் "ஸ்டெம் செல்" தானமளிப்போருக்கான பதிவேடு சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ரத்த வங்கியின் தலைவர் டாக்டர் பி.ஸ்ரீனிவாசன், "ரத்ததானம் செய்பவர்களுக்கான பதிவேடு தயார் செய்யப்படுவது போல "ஸ்டெம் செல்" தானமளிப்பவர்களுக்கான பதிவேட்டையும் தயார் செய்ய முடியும்.
ரத்ததானம் அளிப்பவர்கள் தங்கள் உடலில் உள்ள ரத்தம் குறித்த அடிப்படை பரிசோதனைகள் செய்து, தங்கள் பெயரை பட்டியலில் சேர்ப்பது வழக்கம்.
அதுபோன்று "ஸ்டெம் செல்" தானமளிப்பவர்களுக்கு எச்.எல்.ஏ என்ற வகை பரிசோதனை அவசியம் ஆகும். ஆனால் அந்தப் பரிசோதனையை செய்வதற்கு ஒரு நபருக்கு ரூபாய் 7,500 வரை செலவாகும்.
அந்தச் செலவை தானமளிப்பவரிடம் இருந்து பெறமுடியாது. எனவே இந்தப் பரிசோதனைக்கு ஆகும் செலவுக்கான நிதியை காட்டர்பில்லர், டாடா அறக்கட்டளை, ஆஸ்திரேலிய தூதரகம் போன்ற நிறுவனங்கள் நிதியுதவியாக அளித்துள்ளன.
இன்னும் ஐந்து ஆண்டுகளில் 50 ஆயிரம் ஸ்டெம் செல் தானமளிப்போரை பதிவேட்டில் இணைப்பது நோக்கமாகும்.
இந்தியாவைப் பொருத்தவரை ஓராண்டில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு ரத்தப் புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்படுகிறது. 10 ஆயிரம் குழந்தைகள் தலசீமியா போன்ற நோய்களுடன் பிறக்கின்றனர்.
இத்தகைய பிரச்னைகளுக்கு "ஸ்டெம் செல்" மாற்று சிகிச்சை ஒரு நல்ல தீர்வாகும். எனவே "ஸ்டெம் செல்" தானமளிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும்.
20 வயது முதல் 40 வரையுள்ள ஏற்கெனவே ரத்ததானம் வழங்கியவர்கள் "ஸ்டெம் செல்" தானமளிக்க முன்வரலாம்" என்று அவர் தெரிவித்தார்.