குஜராத் மியூசியத்தில் இருக்கும் ரூ. 100 கோடி மதிப்பிலான சிலைகள் - மீட்க நடவடிக்கை
தஞ்சையில் மாயமான ராஜராஜ சோழன் சிலை மற்றும் மனைவி லோகமாதேவி சிலைகள் குஜராத்தில் தனியார் அருங்காட்சியகத்தில் உள்ளதாக மாவட்ட எஸ்.பி. செந்தில் குமார் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன 100 கோடி மதிப்புள்ள சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி செந்தில் குமார் கூறியுள்ளார்.
திருடப்பட்ட ராஜ ராஜ சோழன் சிலை மற்றும் மனைவி லோகமாதேவி சிலைகள் குஜராத்தில் தனியார் அருங்காட்சியகத்தில் உள்ளது அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.பி. செந்தில்குமார் கூறியுள்ளார்.
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில் இருந்த சிலைகள் காணவில்லை என முன்னாள் அமைச்சர் சாமிநாதன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில்
தமிழகத்தில் எம்.ஜி.ஆர். முதல்வராக பதவி வகித்தபோது, 1986-1987 ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்தேன். ராஜ்யசபா எம்.பி.யாகவும் 2 முறை பதவி வகித்துள்ளேன்.
தென்னிந்தியா முழுவதையும் கி.பி.985 முதல் 1014-ம் ஆண்டு வரை ராஜ ராஜ சோழன் ஆட்சி புரிந்தார். இவரது ஆட்சிக்காலத்தில் தஞ்சையில் 'பெருவுடையார்' என்ற சிவன் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டது.
சிலைகள் திருட்டு இந்த கோவிலில் 80 டன் எடையுள்ள மிகப்பெரிய ஒரே கல்லை 190 அடி உயரத்தில் வைத்து, கட்டியுள்ளனர். இவ்வளவு பெரிய கல்லை கோவிலுக்கு மேல் ஏற்றுவதற்காக 4 மைல் தூரத்துக்கு சாய்வு தளப்பாதையை அப்போது அமைத்துள்ளனர்.
இந்த கோவிலை கட்டி கும்பாபிஷேகம் செய்தபோது, கோவிலில் உள்ள பெருவுடையார் என்ற சிவபெருமானை நோக்கி கும்பிடுவது போல ராஜ ராஜ சோழன் மற்றும் அவரது மனைவி லோகமாதேவி ஆகியோரது உருவச்சிலைகள் தங்கத்தால் செய்து வைக்கப்பட்டன.
அதாவது ராஜ ராஜ சோழனின் சிலை 74 சென்டிமீட்டர், லோகமாதேவியின் சிலை 53 சென்டிமீட்டர் உயரம் கொண்டதாக இருந்தது. ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த இந்த தங்கச்சிலைகள் 1900ஆம் ஆண்டு வரை கோவிலில் இருந்தது. அதன்பின்னர், அந்த சிலைகள் மர்மநபர்களால் திருடப்பட்டுவிட்டது. இதையடுத்து இந்த சிலைகளை மீட்க இந்திராகாந்தியும், எம்.ஜி.ஆரும் சில நடவடிக்கைகளை எடுத்தனர்.
அப்போது நானும் இந்த சிலையை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி இந்து சமய அறநிலையத்துறை செயலாளரிடம் மனு கொடுத்தேன். குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள கவுதம் சாராபாய் அறக்கட்டளைக்கு சொந்தமான அருங்காட்சியகத்தில் ராஜ ராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் உள்ளன என்று கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த இரு தங்கச்சிலைகளையும் குஜராத்தில் இருந்து மீட்டுக்கொண்டுவர தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரியிருந்தார்.
இதனிடையே தஞ்சை பெரிய கோவிலில் காணாமல் போன சிலைகள் தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி பொன்மாணிக்கவேல் இன்று விசாரணை செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட எஸ்.பி செந்தில்குமார் ராஜ ராஜ சோழன் சிலை, அவரது மனைவி லோகமாதேவி உள்பட 13 சிலைகள் மாயமாகியுள்ளதாகவும், இதுவரை 100 கோடி ரூபாய் மதிப்பிலான சிலைகள் காணாமல் போயுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ராஜ ராஜ சோழன் சிலை உள்பட அனைத்து சிலைகளையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.ஜி பொன்மாணிக்க வேல் கூறினார். பெரிய கோவிலில் மாயமான சிலைகள் குஜராத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அங்கு தனிப்படை அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் கூறினார்.