ரயிலில் மோதி, தண்டவாளத்தில் இழுத்துச் செல்லப்பட்டும்.. உயிர் பிழைத்த "லக்கி"
சென்னை: சென்னையில் ஒரு தெரு நாய், ரயிலில் மோதி, தண்டவாள்தில் இழுத்துச் செல்லப்பட்டும் கூட அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளது. அந்த நாயை மீட்ட அக்கம்பக்கத்தினர் அதற்கு லக்கி என்று பெயரிட்டுள்ளனர்.
பழவந்தாங்கல் பகுதியில் இந்த ஆச்சரியமான சம்பவம் நடந்துள்ளது. அந்த நாய் ரயிலில் அடிபட்டு 200 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்ட நிலையிலும் உயிர் பிழைத்துள்ளது. பலத்த காயமடைந்தபோதிலும் நாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படவில்லை.
காயமடைந்து கிடந்த நாயை அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று பார்த்தபோது நாய்க்கு உயிர் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்தப் பகுதியைச் சேர்ந்த வினோதா என்ற விலங்குகள் நல ஆர்வலரான மாணவிக்கு சிலர் தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்தார். பின்னர் வி.சி.சசிகிரண், வினோத், முஸ்தபா ஆகியோர் சேர்ந்து ஒரு வண்டியில் நாயை எடுத்துக் கொண்டு சாந்தோம் பகுதியில் உள்ள ஹார்ட் டூ ஹார்ட் என்ற கால் நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அதற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வரும் மாணவி வினோதா கூறுகையில் நாயின் ஒரு கண் போய் விட்டது. பலத்த காயத்துடன் ரத்தம் சொட்டச் சொட்டக் கிடந்தது. நான் மிகுந்த ஆச்சரியப்பட்டுப்போனேன். இந்த நாய் உயிர் தப்பியது மிகப் பெரிய விஷயம் என்றார்.
நாய்க்கு சிகிச்சை அளித்த டாக்டர் தங்கவேல் அதற்கு ஆபரேஷன் ஒன்றையும் செய்தார். தற்போது நாயின் உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாகவும், அதன் ஒரு கண் பறி போனாலும் கூட இன்னொரு கண்ணில் பார்வை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது அந்த நாய் தொடர்ந்து ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறது.
அந்த நாயை மீட்டவர்கள் தற்போது அதற்கு லக்கி என்று பெயர் வைத்துள்ளனர். சீக்கிரமே லக்கி குணமடைய வேண்டும் என்றும் அவர்கள் பிரார்த்திக்கின்றனராம்.