சென்னை மெரினாவில் குழுகுழுவாக திரளும் மாணவர்கள்... நூதன முறையில் தொடரும் போராட்டத்தால் பதற்றம்!
சென்னை மெரினா கடற்கரை சாலையில் அமர்ந்து 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை: மெரினா கடற்கரையில் குழுக்களாக மாணவர்கள் அடுத்தடுத்து திரண்டு வருகின்றனர். 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திடீரென விவேகானந்தர் இல்லம் அருகே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் இளைஞர்கள் அணி அணியாக மெரினாவுக்கு திரண்டு வருகின்றனர். அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்க ஒப்புதல் அளித்த மத்திய அரசைக் கண்டித்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் முழக்கமிட்டனர்.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைது செய்தனர். மெரினாவில் தொடரும் போராட்டத்தால் அப்பகுதியில் பதற்றம் நீடிக்கிறது.போலீஸின் பலத்த பாதுகாப்பையும் மீறி இன்று மதியம் 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மெரினா கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தங்களின் உயிர் போனாலும் பரவாயில்லை விவசாயிகள் காப்பாற்றப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்
இந்நிலையில் தற்போது மெரினா கடற்கரை சாலையிலேயே அமர்ந்து மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று இரவுக்குள் விவசாயிகளுக்கு ஆதரவாக ஏராளமான மாணவர்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் மெரினா கடற்கரை பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிற்து.












Click it and Unblock the Notifications