தருண் விஜயை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம்.. போலீசாருடன் தள்ளுமுள்ளு.. புதுவையில் பரபரப்பு
புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் பாஜகவின் தருண் விஜயின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில் தருண் விஜய்க்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதால் போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலாச்சார விழாவில் சிறப்பு விருந்தினராக பா.ஜ.க. முன்னாள் எம்.பி. தருண் விஜய் நேற்று கலந்து கொண்டார். அப்போது, இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தருண் விஜயை முற்றுகையிட்டு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறுமாறு கோஷமிட்டனர்.

தருண் விஜய்க்கு எதிராக தொடர்ந்து மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் மாணவர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தருண் விஜய்க்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

எனினும் மாணவர்கள் விழா நடைபெறும் கட்டிடத்துக்கு வெளியே திரண்டு தொடர்ந்து தருண் விஜய்க்கு எதிராக குரல் எழுப்பினர். சுமார் 3 மணிநேரத்திற்கு பின்னர் மாணவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் பல்கலைக் கழக வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக, கருப்பாக உள்ள தென்னிந்திய மக்களுடன் வட இந்தியர்கள் சேர்ந்து வாழவில்லையா என்று பா.ஜ.க. முன்னாள் எம்.பி. தருண் விஜய் சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்து இருந்தார். தருண் விஜய்-ன் இந்த கருத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.












Click it and Unblock the Notifications