சென்னை முதல் ராமேஸ்வரம் வரை.. கலாமுக்கு உருக்கமான அஞ்சலி செலுத்திய மாணவர்கள்!
சென்னை: மக்கள் ஜனாதிபதி அப்துல்கலாம் முதலாவது நினைவு தினத்தையொட்டி சென்னை தொடங்கி ராமேஸ்வரம் வரை பல பள்ளி மாணவர்கள் மவுன ஊர்வலம் சென்றும், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியும் அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவு நாள் நாடு முழுவதும் இன்று கடைபிடிக்கப்பட்டது. பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் மத்திய, மாநில அமைச்சர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மண்டபம் ராஜா மெட்ரிக் பள்ளி தாளாளர் ராஜா தலைமையில் 550 மாணவ, மாணவிகள் தங்கச்சிமடத்தில் இருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டு கலாம் நினைவிடத்தில் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். இதுபோன்று ராமேஸ்வரம் செஞ்சிலுவை சங்கம் சார்பில் பர்வதவர்த்தினி பெண்கள் பள்ளியைச் சேர்ந்த 700 மாணவிகள் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர்.
அமைதி ஊர்வலம்
அப்துல்கலாம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி குரோம்பேட்டை நேரு நகர் எஸ்.சி.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதனை சிட்லபாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சூரியலிங்கம் கலந்து கொண்டு துவக்கிவைத்தார். உடன் எஸ்.சி.எஸ் பள்ளியின் முதல்வர் பேபி சரோஜா, தளாளர் ச. கிருஷ்சந்தானம், செயலர் வி. சந்தானம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
ஒவியம் தீட்டி அஞ்சலி
திருவள்ளூர் ஸ்ரீநிகேதன் பள்ளியில், ‘காலத்தை வென்ற கலாம்' எனும் தலைப்பில் 2,000 மாணவர்கள் கலாமின் ஓவியத்திற்கு வண்ணம் தீட்டி மரியாதை செலுத்தினர். பள்ளி தாளாளர் விஷ்ணுசரன் தலைமை வகித்தார். இயக்குனர் பரணிதரன் முன்னிலை வகித்தார். தொடர்ந்து 2,000 மாணவர்கள், கலாமின் படத்திற்கு வண்ணம் தீட்டி, இந்தியா-2020 என்ற இலக்கை அடைய உறுதி ஏற்றனர்.
கலாம் போல வேடம்
கடந்த வாரம் முழுவதும் கலாம் வாரம் என, அவரது மறைவை நினைவுகூரும் வகையில், தினமும் வழிபாட்டு கூட்டத்தில் அவரது பொன்மொழிகளை கூறியவாறு, அப்துல் கலாம் போல வேடம் அணிந்து எல்.கே.ஜி மழலையர்கள் காட்சியளித்தனர். பள்ளி முதல்வர் பத்மாவதி, மாணவர்களுக்கு கலாம் ஓவியத்தை வழங்கி வழிநடத்தினார்.
மாணவர்கள் ஊர்வலம்
அப்துல் கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மவுன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மாநகர காவல் துறை ஆணையர் திருஞானம் கொடி அசைத்து தொடங்கி வைத்தர். இதில் கலந்துகொண்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் அப்துல் கலாமின் உருவம் பதித்த முகமூடி அணிந்து ஊர்வலமாக சென்றனர்.