வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம்… சென்னையில் திடீரென கொட்டிய மழை…
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னையில் காலை நேரத்தில் திடீர் என மழை கொட்டியது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கி வாகன ஓட்டிகளை சிரமத்திற்குள்ளாக்கியது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலையால், தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனால் நேற்று வெயிலடித்தாலும் குளுமையான காற்றே வீசியது. இன்று காலை நேரத்தில் வெயிலடித்தாலும் திடீரென மேகமூட்டம் ஏற்பட்டு கனமழை கொட்டியது. வெயிலை நம்பி துணிகளை துவைத்து காயப்போட்ட சென்னைவாசிகள் அவசரம் அவசரமாக ஓடிப்போய் துணிகளை எடுத்து வந்தனர்.
மயிலாப்பூர், மந்தைவெளி, பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளில் கால்மணிநேரம் மட்டுமே பெய்தாலும் அடித்து ஊற்றிய மழையால் சாலைகளின் ஓரங்களில் வெள்ளநீர் தேங்கியது. இதனால் காலை நேரத்தில் அலுவலகம் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியது. தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாகவே தமிழகம் மற்றும் புதுவையில் அவ்வப்போது மழையும், வெயிலுமாய் மாறி மாறி வானிலை காணப்படுகிறது.
இந்த மாதத்துடன் வடகிழக்கு பருவமழை காலம் முடிவடைந்தாலும், ஜனவரியிலும் தொடரும் என, வானிலை மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, வலுவிழந்தாலும், ஈரப்பதம் மிகுந்த காற்றால், தமிழகத்தில் ஆங்காங்கே, கடந்த ஒருவாரமாக மழை பெய்தது. சென்னையிலும், சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்தது.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன், தெற்கு அந்தமான் பகுதியில், காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார். இந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகத்தில் மழை தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.
தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, மேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், தமிழக கடலோர மாவட்டங்களில், மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; ஒருசில இடங்களில், மழைக்கு வாய்ப்பு உண்டு என்றும் ரமணன் கூறியுள்ளார்.