''குனிந்தது போதும், நிமிர்ந்திடு தலைவா''.. தனிக் கட்சி தொடங்க ஒ.பி.எஸ். ஆதரவாளர்கள் அழைப்பு
சென்னை: ''பொறுத்தது போதும், பொங்கி எழு தலைவா... குனிந்தது போதும்... நிமிர்ந்திடு தலைவா... தமிழகம் திரும்பும் உன்னை நோக்கி''...
இது அழகிரிக்கோ, வேறு யாருக்கோ அடித்த போஸ்டர் அல்ல... பச்சப்புள்ள பன்னீர் செல்வத்தை உசுப்பேற்ற அவரது ஆதரவாளர்கள் அடித்த போஸ்டர்தான் இப்படி வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது.
அதிமுகவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் ஓ.பன்னீர்செல்வம். அமைச்சரவையிலும் முதல்வருக்கு அடுத்த இடம் இவருக்கு தான். அதனால்தான், ஜெயலலிதா இரண்டு முறை முதல்வர் பதவியை இழந்தபோதும் பன்னீர்செல்வத்தையே முதல்வராக்கினார்.அந்த அளவு நம்பிக்கைக்குரிய வராக இருந்த பன்னீர்செல்வம், சமீபகாலமாக ஓரங்கட்டப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓ.பன்னீர்செல்வம் மீதான முதல்வரின் கோபத்துக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. தேர்தலில் சீட் கேட்டு பலரும் பன்னீர்செல்வத்தை அணுகியதாக கூறப்படுகிறது.

பன்னீர் செல்வம் வாரிசுகள்
இந்த விவகாரத்தில், பன்னீர்செல்வம் மற்றும் அவரது இரு மகன்களின் செயல்பாடுகள் தொடர்பாக உளவுப்பிரிவினர் தகவல்களை சேகரித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்றதாகவும், இதனையடுத்து அவரது ஆதரவாளர்களை படிப்படியாக கட்சியை விட்டு நீக்குவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

பச்சை குத்தி பதற வைத்து
இதற்கிடையில், முதல்வர் ஜெயலலிதாவின் 68வது பிறந்த நாளின்போது வேளச்சேரி முருகன் திருமண மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஒரு சிறுமி கதறக் கதற அவரது கையில் முதல்வரின் உருவம் பச்சை குத்தப்பட்டது.

சிக்கிய அமைச்சர்கள்
இதை அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம் ஆகியோர் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற வாட்ஸ் அப் வீடியோ வெளியானது. சமூக வலைத்தளங்களில் இது குறித்து கடுமையாக கருத்துக்கள் பதிவிடப்பட்டன.

பதவிகள் பறிப்பு
இதைத் தொடர்ந்தே, பன்னீர்செல்வத்தின் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்த மீனவர் பிரிவைச் சேர்ந்த ரமேஷ், வேளச்சேரி எம்எல்ஏ அசோக்கின் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டது.

ஓரங்கட்டப்பட்ட ஐவரணி
இதனையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முன்னணி அமைச்சர்கள் யாரும் மேடையில் ஏற்றப்படவில்லை. மேலும், நேற்று முன்தினம் காஞ்சிபுரத்தில் மகளிர் அணி சார்பில் நடத்தப்பட்ட நன்றி அறிவிப்பு கூட்டத்திலும் பங்கேற்க பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஆதரவு அமைச்சர்கள்
இந்நிலையில், பன்னீர்செல்வத்தின் ஆதரவு அமைச்சர்களாக கருதப்படும் சின்னையா, விஜய பாஸ்கர் பதவிகளும் திடீரென பறிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பின்னணியில், இந்தமுறை தேர்தலில் பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற பேச்சும் அதிமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது.

தனி கட்சி தொடங்க அழைப்பு
இதை தொடர்ந்து, சில நாட்களாக, தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள், பன்னீர்செல்வத்தை தனியாக கட்சி தொடங்குமாறு அழைப்பு விடுத்து உசுப்பேற்றுகின்றனர். இதற்காக, கட்சியின் பெயர், கொடி உள்ளிட்டவற்றையும் அவர்கள் தீர்மானித்துவிட்டனர்.

எம்.ஜி.ஆர் அதிமுக
பொறுத்தது போதும், பொங்கி எழு தலைவா... குனிந்தது போதும்... நிமிர்ந்திடு தலைவா... தமிழகம் திரும்பும் உன்னை நோக்கி என்று தேவர் இளைஞர் பேரவை பெயரில் வலம் வரும் போஸ்டரில், அ.தி.மு.கவின் கொடியில், அண்ணாதுரை உருவத்திற்கு பதில், எம்.ஜி.ஆர் படம் இடம் பெற்றுள்ளது போல் அமைக்கப்பட்டு உள்ளது. கட்சிக்கு எம்.ஜி.ஆர். அதிமுக என பெயரிடப்பட்டு உள்ளது.

அப்போ அடுத்த ஆப்பு
இந்த படம் வாட்ஸ் ஆப், பேஸ்புக் மூலம் வேகமாக பரவி வருகின்றன. இந்த படங்களால் அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சும்மாவே ஆடுற சாமிய கையில் வேப்பிலையை கொடுத்து ஆடச் சொன்னா எப்படி இருக்கும்? அந்த மாதிரி ஓ.பி.எஸ். ஆதரவாளர்களை ஒருவர் பின் ஒருவராக வெட்டி வருகிறார் ஜெயலலிதா. இப்போது தனி கட்சி தொடங்க ஆதரவாளர்கள் உசுப்பேற்றியுள்ளதால் அடுத்த ஆப்பு பன்னீர் செல்வத்திற்குத்தான் என்று பேசப்படுகிறது.
பாவம் பச்சப்புள்ள பன்னீர் செல்வம்!!












Click it and Unblock the Notifications