கர்நாடகத்தில் நாளை முதல் பருவ மழை... சென்னையில் செம வெயில்!
சென்னை: கேரளாவில் தொடங்கியுள்ள பருவ மழை அடுத்து கர்நாடகத்தையும் நனைக்கவுள்ளது. நாளை முதல் அங்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்குப் பருவ மழை இந்த ஆண்டு சற்று தாமதமாக, அதாவது நான்கு நாட்கள் தாமதமாக கேரளாவில் தொடங்கிப் பெய்து வருகிறது. கேரளாவில் பருவ மழை தொடங்கியுள்ளதால், கேரளாவையொட்டியுள்ள தமிழகம் மற்றும் கர்நாடகத்திலும் லேசான மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடலோரக் கர்நாடகம் மற்றும் தெற்கு உட்புறக் கர்நாடகத்தில் பருவ மழையை நாளை முதல் எதிர்பார்க்கலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், ஆந்திராவில் வெயில் தொடரும். தமிழகத்தின் இதர பகுதிகளிலும் வெயில் தொடரும். சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை ஓரிரு இடங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றார்.