சுவாதி கொலை: நுங்கம்பாக்கம் பகுதியில் பதிவான 5 லட்சம் செல்போன் அழைப்புகள் ஆய்வு!
சென்னை: சுவாதி கொலை செய்யப்பட்டு இன்றோடு 7 நாட்கள் ஆகிவிட்டன. கொலைக்கான காரணம் பற்றிய விபரம் தெளிவாக தெரியாத காரணத்தால், கொலையாளியை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொலையாளியின் தெளிவற்ற புகைபடத்தை வைத்துக்கொண்டு சூளைமேடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலை செய்யப்பட்ட போது காலை 6 மணியில் இருந்து 7 மணி வரை அந்தப் பகுதிக்கு வந்த 5 லட்சம் செல்போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
குற்றவாளியை விரைந்து கண்டுபிடிப்பது தொடர்பாக நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் சென்னை கமிஷனர் டி.கே. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கூடுதல், இணை, துணை மற்றும் உதவி கமிஷனர்கள் கலந்து கொண்டனர். சுவாதியின் ஆண் நண்பரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தியும் கொலையாளி யார் என்பதை கண்டறிவதில் மர்மம் நீடிக்கிறது.
சுவாதி கொலை
கடந்த வெள்ளிக்கிழமை காலை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார் சுவாதி. இந்த கொலை பற்றி
ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையை பெருநகர காவல் துறை விசாரிக்க டி.ஜி.பி. அசோக் குமார் திங்கள்கிழமை உத்தரவிட்டார். இந்த வழக்கை விசாரிக்க முதலில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பின்னர் தனிப்படைகள் 8ஆக உயர்த்தப்பட்டுள்ளன.
8 தனிப்படை தீவிர விசாரணை
8 தனிப்படை போலீஸாரும் பல்வேறு கோணங்களில் வழக்கை விசாரித்து வருகின்றனர். கொலை தொடர்பாக சுவாதி செல்லும் வழியில் உள்ள கண்காணிப்பு கேமராகளில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
சிசிடிவி கேமரா
சுவாதி பரனூர் ரயில் நிலையத்தில் இறங்கியே அலுவலகம் செல்வார். இதனால் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். நுங்கம்பாக்கம் கேமராக்களில் பதிவான அதே நபரின் உருவம், பரனூரிலும் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
வீடு வீடாக விசாரணை
இந்த நிலையில், குற்றவாளியை அடையாளம் காணும் வகையில் சூளைமேடு, நுங்கம்பாக்கம், சவுராஷ்டிரா நகர், நாராயணபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக 50க்கும் மேற்பட்ட போலீசார் புதன்கிழமை சென்று விசாரணை நடத்தினர். அப்போது மர்ம நபரின் புகைப்படம், வீடியோ காட்சியைக் காட்டி, குற்றவாளி குறித்த தகவல்களை போலீசார் கேட்டறிந்து வருகின்றனர்.
கோவிலில் மிரட்டிய நபர்
கொலை நடப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பு சூளைமேடு நெடுஞ்சாலையில் உள்ள கங்கையம்மன் கோயிலுக்கு வந்த சுவாதியை பைக்கில் வந்த ஒரு இளைஞர் வழி மறித்து தகராறு செய்துள்ளார். அங்கிருந்து சுவாதி வேகமாக சென்று விட்டார் என்று கோயில் பூசாரி ஒருவரும், பூ விற்கும் பெண்ணும் போலீசாரிடம் கூறியுள்ளனர்.
துப்பு துலங்கவில்லை
அவரது குடும்பத்தினர், தோழிகளிடம் நடத்திய விசாரணையில், சில தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்தனர். சம்பவம் நடக்கும்போது அங்கு இருந்த 2 திருநங்கைகளிடம் நடத்தப்பட்ட விசாரணையிலும், சில தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் கொலை நடந்து 6 நாள்களாகியும் இந்த கொலை வழக்கில் துப்புத் துலங்கவில்லை.
மைசூரில் இரு தனிப்படை
சுவாதி மைசூரில் 6 மாதங்கள் தங்கி பயிற்சி பெற்று, சில மாதங்கள் பணிபுரிந்தார். அவர் அங்கு பணி செய்த காலத்தின்போது ஏதேனும் பிரச்னை ஏற்பட்டதா என்பது குறித்து விசாரிக்க இரு தனிப்படையினர் அங்கு முகாமிட்டுள்ளனர். அங்கு அவரோடு தங்கியிருந்தவர்கள், பணிபுரிந்தவர்களிடம் விசாரணை நடைபெறுகிறது.
அரிவாள் பற்றி ஆய்வு
சுவாதியை கொலை செய்ய பயன்படுத்திய அரிவாளும், கர்நாடக மாநிலம் குடகு பகுதியைச் சேர்ந்த குறிப்பிட்ட சமுதாய மக்கள் பயன்படுத்துவது என்பதால் இதுதொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
5 லட்சம் செல்லிடப்பேசி அழைப்புகள் ஆய்வு
சுவாதி கொலை செய்யப்பட்ட நாளன்று, காலை 6 மணியில் இருந்து 7 மணி வரை அந்தப் பகுதிக்கு வந்த அனைத்து செல்போன் அழைப்புகளையும் போலீசார் கடந்த இரு நாள்களாக ஆய்வு செய்தனர். அந்த நேரத்தில் சுமார் 5 லட்சம் செல்போன் அழைப்புகள் பதிவானதாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக அழைப்புகள்
தேவையானவற்றை தணிக்கை செய்து சந்தேகத்துக்குரிய எண்களை மட்டும் விசாரித்து, கண்காணித்து வருகின்றனர். இதேபோல, சுவாதிக்கு கடந்த 6 மாதத்தில் வந்த அழைப்புகளையும், பிறரிடம் அவர் பேசிய அழைப்புகளையும் போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதில், கொலையாளி செல்போனை பயன்படுத்தியிருந்தால், கண்டிப்பாக அவரைப் பற்றிய விவரங்கள் தெரிந்துவிடும் என காவல் துறையினரால் நம்பப்படுகிறது.
சுவாதியின் செல்போன்
காலை 6.30 மணி அளவில் சுவாதியை கொலை செய்துவிட்டு, அவரது செல்போனை எடுத்துச் சென்ற கொலையாளி காலை 8.15 மணிக்குதான் அதை சுவிட்ச் ஆப் செய்துள்ளார். சுவிட்ச் ஆப் செய்யப்பட்டபோது அவரது செல்போன் சிக்னல் சூளைமேடு பகுதியை காட்டியுள்ளது. சுவாதியை கொலை செய்துவிட்டு, அந்த நபர் சூளைமேட்டுக்கு சென்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மர்ம நபர் யார்
இதற்கிடையே நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பரனூரில் உள்ள அலுவலகம் வரை அந்த நபர் தன்னை பின்தொடர்ந்து வந்ததாக இருமுறை செல்லிடப்பேசியில் அச்ச உணர்வோடு சுவாதி பேசியதாக அவரது நண்பர் தெரிவித்துள்ளார். இதனால், அந்த மர்ம நபர் ஒருதலையாக சுவாதியை காதலித்தாரோ என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
நீடிக்கும் மர்மம்
சுவாதியின் ஆண் நண்பரிடம், கொலையாளியின் படத்தை காண்பித்து, சென்னை மாநகர காவல் ஆணையர் டி.கே.ராஜேந்திரன், கூடுதல் ஆணையர் சங்கர் ஆகியோர் விசாரணை நடத்தியனர். இந்த விசாரணையின் முடிவில் போலீசாரால் கொலையாளியை இன்னும் நெருங்க முடியாத நிலையே நீடிக்கிறது. சுவாதி கொலை செய்யப்பட்டு 7 நாட்களாகியும் கொலையாளி யார்? என்பதை கண்டுபிடிப்பதில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.