ஆகஸ்ட் 7 முதல் தாம்பரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் முனையம் - குவஹாத்திக்கு முதல் ரயில்
தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் முனையம் ஆகஸ்ட் 7 முதல் சோதனை அடிப்படையில் செயல்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை: தாம்பரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் முனையம் ஆகஸ்ட் 7 முதல் 31-ம் வரை சோதனை அடிப்படையில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குவாஹத்தி செல்லும் வாரந்திர விரைவு ரயில் தாம்பரத்தில் இரவு 9.15 மணிக்கு புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ஆகிய 2 ரயில் முனையங்கள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக, தாம்பரத்தில் 3வது ரயில் முனையம் அமைக்கும் பணிகள் முடிந்ததுள்ளது.
இந்த நிலையில் சோதனை அடிப்படையில் குவஹாத்தி எக்ஸ்பிரஸ் மற்றும் திப்ருகர் எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரயில்கள் வருகிற 7 மற்றும் 9ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறது.
இந்த சோதனைக்கு பின்னர் எந்தெந்த ரயில்கள் தாம்பரம் முனையத்தில் இருந்து இயக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை எழும்பூரில் இருந்து குவஹாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் எண்:15629 வரும் திங்கட்கிழமை முதல் தாம்பரம் 3-வது ரயில் முனையத்துக்கு கொண்டு வரப்பட்டு இரவு 9.45 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் 8-வது நடைமேடையில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வழியாக குவஹாத்தி செல்லும்.
அதே போல திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் எண்:15929 வரும் புதன்கிழமை 9ஆம் தேதி இரவு தாம்பரம் ரயில் நிலைய 8-வது நடைமேடையில் இருந்து புறப்பட்டு செல்கிறது.
இந்த 2 எக்ஸ்பிரஸ் ரயில்களும் சோதனை அடிப்படையில் தொடர்ந்து இயக்கப்பட உள்ளது. இதன் பின்னர் மற்ற எந்தெந்த ரயில்கள் தாம்பரம் முனையத்தில் இருந்து இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவிக்கும்.
இந்த ரயில் முனையம் முழுமையாக செயல்படத் தொடங்கும் போது தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.