தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதான பாடகர் கோவனுக்கு ஜாமீன்
சென்னை: தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள, நாட்டுப்புற பாடகர் கோவனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை செஷன்ஸ் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி குழுமணி அருகேயுள்ள அரவானூரைச் சேர்ந்தவர் கோவன் (51). இவர் மக்கள் கலை இலக்கியக் கழக (மகஇக) கலைக் குழு மையப் பொறுப்பாளராக இருந்து வருகிறார்.
மது விலக்கை வலியுறுத்தி நடத்திவரும் கலை நிகழ்ச்சிகளில் கோவன் பாடிய "மூடு டாஸ்மாக்கை மூடு' என்ற பாடல் மிகவும் பிரபலமாகி வருகிறது. மேலும், இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களிலும் இந்தப் பாடல் பிரபலமாகி வருகிறது. இந்தப் பாடல் தமிழக முதல்வரை விமர்சிப்பதாக உள்ளதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து, கடந்த மாதம், இறுதியில், ஒரு நள்ளிரவு நேரத்தில், சென்னையிலிருந்து திருச்சி வந்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார், பாடகர் கோவனை அவரது வீட்டுக்குச் சென்று கைது செய்து சென்னைக்கு கொண்டு சென்றனர். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.
சிறையில் அடைக்கப்பட்டிருந்த கோவன் தரப்பு ஜாமீனுக்காக விண்ணப்பித்திருந்தது. விசாரணை நடத்திய செஷன்ஸ் கோர்ட் இன்று மாலை கோவனுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.