தமிழக சட்டசபை 3 நாள் கூட்டம் முடிந்தது... தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
சென்னை: தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் இயற்றப்பட்டநிலையில், சட்டசபை, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா இன்று பேசினார். இன்றைய கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை. உரிமை மீறல் பிரச்சினையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சட்டசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. உறுப்பினர் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இதன் காரணமாக இன்று நடந்த கூட்டத்தை தி.மு.க. உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.
இதே போல் தே.மு.தி.க. உறுப்பினர்களும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினை பற்றி பேச அனுமதி அளிக்கவில்லை என்று கூறி தே.மு.தி.க. உறுப்பினர் நேற்று முதல் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் புதிய தமிழக கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒரு பிரச்சினை குறித்து பேச அனுமதி கேட்டார். அதற்கு சபாநாயகர் அனுமதி தர மறுத்தார். இதை கண்டித்து அவர் வெளிநடப்பு செய்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, மதுரை அருகே உள்ள சோழவந்தான் குருவுத்துறை கிராமத்தில் தேவேந்திர குல மக்கள் மீது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச்சேர்ந்த சிலர் ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர். வீடுகளை தீவைத்து எரித்தனர். இது குறித்து காவல்துறை முகாந்திரம் இல்லாமல் 3 வழக்குகள் பதிவு செய்து உள்ளது.
குற்றவாளிகளுக்கு உதவும் வகையில் காவல் துறை செயல்படுகிறது. தலித் மக்கள் மீது மதுரை ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இது குறித்து கவன ஈர்ப்பு கொண்டு வந்து பேச கடிதம் கொடுத்து இருக்கிறேன்.
இன்றைய கூட்டத்தில் முதல்வர் சபையில் இருக்கும் போது இது பற்றி விவாதிக்க முற்பட்டேன். அதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதை கண்டித்து வெளிநடப்பு செய்து உள்ளேன் என்றார்.
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா பேசியதைத் தொடர்ந்து, சட்டசபை, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.