காஞ்சிபுரம்: கனமழைக்கு வெள்ளத்தில் சிக்கிய 34,426 பேர் மீட்பு - கலெக்டர் கஜலட்சுமி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை 34 ஆயிரத்து 426 பேர் மழை வெள்ள பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு பாதுகாப்பு முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள 116 முகாம்களில் மருத்துவ உதவிகள் மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி தகவல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் ஆர்.கஜலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த 2 நாட்களாக தாம்பரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையினால் பாதிக்கப்பட்டு அவதியுற்ற பொதுமக்களை நகராட்சி நிர்வாகம், கடலோர காவல் படை, தேசிய இடர்பாடுகள் மீட்புப்படை, மாநில இடர்பாடுகள் மீட்புத்துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், இந்திய ராணுவ மீட்புத்துறை, கடற்படையினர், விமானப்படையினர், மீன் வளத் துறையினர் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அரசுத்துறை அலுவலர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து உடனடியாக போர்க்கால அடிப்படையில் வெள்ளத்தினால் நீர்சூழ்ந்த பகுதிகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளை துரிதப்படுத்தி, வெள்ளத்தில் சிக்கி உள்ள பொதுமக்களை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தாம்பரம் டாக்டர் அம்பேத்கர் திருமண மண்டபத்தில் பேரிடர் மீட்பு குழுவினருக்காக தயாரிக்கப்பட்டு வரும் உணவு தரமாக உள்ளதா? என்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
90 படகுகளைக் கொண்டு 553 மீட்புக்குழு பணியாளர்கள் மூலம் 10 ஆயிரத்து 67 நபர்கள் மிகவும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை 34 ஆயிரத்து 426 பேர் மழை வெள்ள பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அரசு பாதுகாப்பு முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள 116 முகாம்களில் மருத்துவ உதவிகள் மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட ஆய்வுகளின் போது தமிழக முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து பலியான 7 நபர்களுக்கு தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.28 லட்சம் நிவாரண உதவியாக அமைச்சர்களால் வழங்கப்பட்டுள்ளது என்று ஆட்சியர் கஜலட்சுமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.