தமிழ் புத்தாண்டு... சித்திரை விஷு கொண்டாட்டமும் கனி காணுதலும்
தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சித்திரை விஷு கனி காணுதல் நிகழ்ச்சி பல ஊர்களில் கோலாகலமாக நடைபெற்றது.
சென்னை: சித்திரை முதல் நாளான தமிழ் வருடப்பிறப்பும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கவேண்டும் என்பதற்காகவே வீட்டில் கனி காணுதலோடு புத்தாண்டை தொடங்குகின்றனர். தமிழ்நாட்டில் கேரளாவை ஒட்டியுள்ள குமரி, நாகர்கோவில், திருப்பூர், கோவை போன்ற ஊர்களில் கனி காணுதல் நிகழ்ச்சி வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது.
ஒரு வருடத்தின் தொடக்கம் என்பது மகிழ்ச்சியானதாக இருக்கவேண்டும். தொடக்கம் சரியாக இருந்தால் அந்த வருடம் முழுவதும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும் என்பது நம்பிக்கை.
தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பல பக்தர்கள் அதிகாலை முதலே கோவில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கனி காணுதல்
ஒரு மிகப்பெரிய தாம்பாளத்தில் வாழைப்பழம், மாம்பழம், ஆரஞ்சு, கொய்யா, ஆப்பிள், மாதுளை இப்படி பலவகை பழங்களை அலங்கரித்து மையப்பகுதியில் புதிய ரூபாய் நோட்டுக்களை வைத்து, அதன் மேல் தங்க, வெள்ளி நகைகளை வைத்து அலங்கரிப்பார்கள்.
தமிழ் புத்தாண்டு
வருடப்பிறப்பிற்கு முதல்நாள் இரவே பூஜை அறையில் ஒரு கண்ணாடியை வைத்து அதன் முன்பாக இந்த பழத்தட்டினை வைத்து விடுவார்கள். விடிந்த உடன் குழந்தைகளின் கண்களை மூடிக்கொண்டு பூஜை அறைக்கு அழைத்து செல்லும் அம்மா அந்த பழத்தட்டிலும், கண்ணாடியிலும் விழிக்கச் சொல்வார்கள். இதுபோன்ற மங்கலப் பொருட்களைப் பார்த்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
கை நீட்டம்
குளித்து முடித்து புத்தாடை உடுத்தி சாமி கும்பிட்ட பின்னர், பெரியவர்கள், தட்டில் வைத்த புது ரூபாய் நோட்டுக்களை எடுத்து வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும், மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள் இதனை கைநீட்டம் என்கின்றனர். இதன் மூலம் ஆண்டுதோறும் பணம் குறையாமல் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாகும்.
செல்வம் பெருகும்
தமிழ் புத்தாண்டு தினமான இன்று பல ஆலயங்களிலும் வீடுகளிலும் பூஜை அறையில் வைத்த பணத்தை பலருக்கும் கை நீட்டம் கொடுத்து மகிழ்ந்தனர்.
இந்த பழக்கம் மலையாள மக்களிடம் இருந்து வந்ததுதான் என்றாலும் அன்றைய தினம் கனி காணுதலையும், கை நீட்டம் நிகழ்ச்சியையும் பார்க்கும் போது புது வருட தினத்தன்று உற்சாகத்தைத்தான் தருகிறது.