பஸ் ஸ்டிரைக்கிற்கு வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பிய திமுக தொழிற்சங்கமே காரணம்... ஓ.பி.ஸ் குற்றச்சாட்டு
போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு திமுகவே காரணம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை : தமிழகம் முழுவதும் நடக்கும் போக்குவரத்து கழக ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு திமுகவே முக்கிய காணரம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக சட்டசபையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது, தமிழக போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு திமுக தான் காரணம். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே தோல்வியடைந்துவிட்டதாக வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாகவே உடனடியாக பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை தொடங்கியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வத்தின் பேச்சு போக்குவரத்து ஊழியர்களை அவமதிக்கும் விதத்தில் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் தான் காரணம் என்று துணை முதல்வர் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் திமுகவினர் வலியுறுத்தினர். இதனால் அவையில் இருதரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடந்தது.