டெங்குவிற்கு தமிழகத்தில் 40 பேர் மட்டுமே பலி... அரசு அறிவிப்பு
டெங்கு காய்ச்சல் நோய்க்கு தமிழகத்தில் 40 பேர் பலியாகியுள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை : டெங்கு காய்ச்சல் நோய்க்கு தமிழகத்தில் 40 பேர் பலியாகியுள்ளதாக அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு நாள்தோறும் 5 பேராவது உயிரிழப்பது வாடிக்கையாகிவிட்டது. டெங்கு நோயை கட்டுப்படுத்த அரசு தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் டெங்கு காய்ச்சல் மரணம் குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் முதல்வர் பழனிசாமி அதிகாரிகளுடன் டெங்கு பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தி இருந்தார். இதனிடையே அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் டெங்கு காய்ச்சலுக்கு கடந்த ஆண்டு 5 பேர் மட்டுமே உயிரிழந்த நிலையில் இந்த ஆண்டு தற்போது வரை 40 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
2017 அக்டோபர் 9ம் தேதி வரை டெங்கு காய்ச்சலுக்கு 11,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மலேரியா காய்ச்சலால் 3,524 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்று சிக்குன்குனியா நோய்க்கு 85 பேரும், ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கு 64 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.