வடக்கே இருந்து தென்றலாய் வந்தவர் தருண் விஜய் - கவிஞர் வைரமுத்து
வடக்கேயிருந்து தென்றலாய் வந்து தமிழுக்குக் குரல் கொடுக்கிறார் தருண் விஜய் எம்பி என்று கவிஞர் வைரமுத்து புகழ்ந்தார்.
தமிழுக்காக குரல் கொடுத்து வரும் உத்தரகாண்ட் மாநில எம்.பி. தருண் விஜய்க்கு, சென்னை டி.டி.கே. சாலையில் உள்ள மியூசிக் அகாடமி அரங்கத்தில், வெற்றித் தமிழர் பேரவை சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.
விழாவுக்கு சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமை தாங்கினார்.
விழாவில், பேரவையின் நிறுவனர்-தலைவர் கவிஞர் வைரமுத்து பேசியதாவது:
குரல் புதிது
தமிழும் ஆட்சி மொழியாக வேண்டும்; தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்; திருக்குறள் தேசியப் பெருமை பெறவேண்டும் என்ற கோரிக்கைகள் புதியவை அல்ல. இன்று அதைச் சொல்கிற குரல்தான் புதியது. உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்; இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர். மாநிலங்களவை உறுப்பினர்; ஆர்.எஸ்.எஸ் காரர் என்று அறியப்பட்டவர். இந்தக் கோரிக்கைகளை உயர்த்திப் பிடித்துக் குரல் கொடுக்கிறார் என்பதுதான் தமிழ்நாட்டுக்கு ஆனந்தம் கலந்த ஆச்சரியம்.
தமிழ் விரோதிகள் அல்ல
வடக்கு என்றாலே தமிழை மறுப்பது; இந்தியை ஆதரிப்பது என்ற கருத்து தருண் விஜய் அவர்களால் இன்று உடைக்கப்படுகிறது. எல்லாவற்றிலும் விதிவிலக்கு உண்டு. எல்லா ரத்தமும் சிவப்பல்ல, வெட்டுக்கிளிக்கு வெள்ளை ரத்தம் என்பதுபோல வடநாட்டார் எல்லாம் தமிழுக்கு விரோதிகள் அல்லர். விதி விலக்காக வாய்த்திருக்கிறார் தருண் விஜய்.
மொழியை இழந்தால்...
நம்முடைய முன்னோடிகளும், தலைவர்களும் மொழியை ஏன் முன்னிறுத்திப் போராடினார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள். மொழி இருக்கும் நீளம் வரைக்கும்தான் நிலம் நமக்குச் சொந்தம். ஒரு காலத்தில் தமிழ்பேசும் நிலப்பரப்பு குமரி முனைக்குத் தெற்கே 700 மைல் நீண்டிருந்ததாக அடியார்க்கு நல்லார் தெரிவிக்கிறார். ‘வடவேங்கடம்' வரைக்கும் நீண்டு கிடந்த தமிழ் நிலம் இன்று வெறும் 50,216 சதுர கிலோமீட்டராகச் சுருங்கிவிட்டது. மொழியை இழந்தால் இருக்கும் சின்னப் பரப்பையும் இழந்துபோவோம்.
வாடை அல்ல.. தென்றல்
இலங்கையில் இனம் அழிக்கப்பட்டு தமிழ்நாட்டில் மொழியும் நசுக்கப்பட்டால் தமிழர்கள் நிலம்-முகம் இரண்டையும் இழந்து போவார்கள். அதிகார மையங்களிலும், கல்வி நிலையங்களிலும், ஊடகங்களிலும் தமிழ் நிலை பெற்றால்தான் நாம் இருக்கும் நிலத்தை இழக்காமல் இருப்போம். இந்த தொலைநோக்கு பார்வைக்கு தோள்கொடுக்க வந்திருக்கும் தருண் விஜய் அவர்களைத் தமிழ் உலகம் பாராட்டுகிறது. அவரது கோரிக்கைகளுக்கு இந்த கூட்டம் கைதட்டிக் கைகொடுக்கிறது. தெற்கே இருந்து வருவது தென்றல், வடக்கே இருந்து வருவது வாடை என்பார்கள். இன்று வடக்கே இருந்து தென்றலாய் வந்தவரை வாழ்த்துகிறோம்.
இவ்வாறு வைரமுத்து கூறினார்.
விழாவில் முன்னாள் துணைவேந்தர்கள் அவ்வை நடராஜன், க.ப.அறவாணன், க.திருவாசகம், ம.ராஜேந்திரன் ஆகியோர் பேசினர். விழாவில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.எம்.வீரப்பன், துரைமுருகன், தி.மு.க. அமைப்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், ம.தி.மு.க. சார்பில் மல்லை சத்யா, நடிகை குஷ்பு, கவிஞர் காசிமுத்து மாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.