”டாஸ்மாக்கில் இனி ஒரு பாட்டில்தான் கிடைக்கும்”- தேர்தல் ஆணையம்
லோக்சபா தேர்தலையொட்டி, "டாஸ்மாக்" கடைகளில் மதுபானங்கள் விற்பனையை கண்காணிக்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. ஒருவருக்கு ஒரு பாட்டிலுக்கு மேல் வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலில் வாக்காளர்களை கவர அரசியல் கட்சியினர் பணம், மதுபானம், பரிசு, போன்றவற்றை வழங்குகின்றனர். இதை தடுக்க தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில்,"டாஸ்மாக்" அதிகாரிகள், மதுவிலக்கு தடுப்பு குற்றப்பிரிவு மற்றும் கலால் துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் பேசும்போது, ''வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியினர் பணம் கொடுப்பதுடன் அதிக அளவில் மதுபானம் வழங்குகின்றனர்.இதை தடுக்க வேண்டும். எனவே, அனைத்து மதுபானக் கடைகளையும் கண்காணியுங்கள். ஒருவருக்கு ஒரு பாட்டில் மதுபானம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மதுபானங்களை மொத்தமாக விற்பனை செய்யக் கூடாது,'' என, அறிவுறுத்தி உள்ளார்.