நாமக்கலில் 156 பார்களுக்கு ஒரே நேரத்தில் சீல் வைப்பு... புத்தாண்டு அதுவுமா 'குடி'மகன்களுக்கு ஷாக்!
நாமக்கலில் ஒரே நேரத்தில் 156 பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் : நாமக்கலில் பார் ஒப்பந்தத்தை உரிமையாளர்கள் புறக்கணித்த நிலையில் அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடியாக 156 பார்களுக்கு பூட்டி சீல் வைத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 201 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் 165 டாஸ்மாக்குகளில் பார் வசதியுடன் இயங்கி வருகின்றன. டெண்டர் முறையில் பார்கள் வைத்துக் கொள்ள உரிமையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. டெண்டர் காலம் நேற்றோடு முடியும் நிலையில் கடந்த வாரத்தில் இதற்கான ஏல தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த டெண்டரை பார் உரிமையாளர்கள் புறக்கணித்ததாக தெரிகிறது. மாதாந்திர வரியுடன் 12 சதவீத ஜிஎஸ்டி வரியும் செலுத்த வேண்டும் என்று டெண்டரில் தெரிவிக்கப்பட்டதால் உரிமையாளர்கள் டெண்டரை புறக்கணித்தனர். இதனையடுத்து டெண்டர் காலமும் நேற்றோடு முடிந்த நிலையில் அதிகாரிகள் இன்று சுமார் 165 பார்களுக்கு பூட்டு போட்டு சீல் வைத்தனர்.
ஒரே நேரத்தில் 165 பார்களையும் அதிகாரிகள் மூடியுள்ளனர். டெண்டரில் ஏலம் எடுக்கப்பட்ட 9 பார்கள் மட்டுமே தற்போது செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 12 சதவீதம் கூடுதல் ஜிஎஸ்டி செலுத்த முடியாது என்று பார் உரிமையாளர்கள் தெரிவித்து வரும் நிலையில், இதனை பரிசீலிக்க முடியாது என்று டாஸ்மாக் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதால், பார்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக பாருக்கு வர முடியாமல் குடிமகன்கள் கவலையடைந்துள்ளனர்.