ஆர்.கே.நகரில் ஓ.பி.எஸ் அதிமுக போட்டி.. வேட்பாளராக மதுசூதனன் அறிவிப்பு
ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் ஓ.பி.எஸ். அதிமுக சார்பில் வேட்பாளராக அவைத் தலைவர் மதுசூதனன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை: ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலில் ஓ.பி.எஸ். அதிமுக சார்பில் வேட்பாளராக அவைத் தலைவர் மதுசூதனன் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் பெயரை இன்று மாலை ஓ.பி.எஸ் தனது வீட்டில் நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது அறிவித்தார்.
ஜெயலலிதா மரணமடைந்ததால், ஆர்.கே.நகர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொகுதிக்கு அடுத்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் 3 அணிகளாக பிரிந்து போட்டியிடுகின்றனர்.

திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக சார்பில் மதிவாணன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.
அதிமுக சசிகலா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 23ஆம் தேதி அவர் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஓபிஎஸ் அணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது பற்றிய எதிர்பார்ப்பு எழுந்தது. வேட்பாளரை தேர்வு செய்ய ஓபிஎஸ் வீட்டில் மதுசூதனன் தலைமையில் ஆட்சிமன்ற குழு கூடி ஆலோசனை நடத்தியது.
ஆலோசனைக்குப்பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், ஆர்.கே. நகரில் அவைத்தலைவர் மதுசூதனன் போட்டியிடுவார் என்று ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார்.
மதுசூதனன் ஜெயலலிதாவிற்காக ஆர்.கே. நகரில் கடந்த இரண்டு முறை மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இவர் ஆர்.கே. நகர் தொகுதியில் 1991 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அப்போதய ஜெயலலிதா அமைச்சரவையில் கைத்தறித்துறை அமைச்சராக இருந்தார்.
ஓபிஎஸ் அணியில் போட்டியிடும் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய மதுசூதனன், தான் இந்த மண்ணின் மைந்தன் என்றும் தனக்கு வெற்றி நிச்சயம் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications