நெல்லையில் வாட்டி வதைக்கும் வெயில்..கோக், பெப்சியை பின்னுக்கு தள்ளி இளநீர், நுங்கு விற்பனை அமோகம்
வெயிலின் தாக்கத்தால் இயற்கை பானங்களின் விற்பனை நெல்லை மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.
தென்காசி: அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கத்திலிருந்து மீள நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் இளநீர், நுங்கு, தர்பூசணி, கூழ், கரும்பு சாறு உள்ளிட்ட நீராகாரங்களின் விற்பனை களைகட்டியுள்ளது.
கடந்த ஆண்டு பெய்ய வேண்டிய பருவ மழை பொய்த்ததை தொடர்ந்து, தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள உடலுக்கு குளிர்ச்சித் தரும் இயற்கை உணவு மற்றும் நீராகாரங்களை பொதுமக்கள் அதிக அளவு உட்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நேற்று மே 4ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. வழக்கத்தை விட வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து நெல்லை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு மேலாக நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம் பகுதிகளில் உடல் சூட்டை தணிக்கும் வகையில் இளநீர், நுங்கு, தர்பூசணி, கூழ், கரும்பு சாறு உள்ளிட்ட நீராகாரங்களின் விற்பனை களைகட்டியுள்ளது.
இதனால், நெல்லை, தென்காசி, பாவூர்சத்திரம், ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளின் சாலையோரங்களிலும் தற்காலிக கூரை கடைகள் அமைத்து அதன் மூலம், உஷ்ணத்தை தணிக்கும் இளநீர், மோர், நுங்கு, கரும்பு சாறு, தர்பூசணி உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
கோடை வெயிலினால் உடலில் நீர்சத்து குறையாமல் இருக்க உதவும், இந்த குளிர்ச்சி தரும் இயற்கை பானங்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி அருந்துகின்றனர். இதனால், கோக், பெப்சி போன்ற அயல் நாட்டு குளிர்பானங்களின் விற்பனை பின்னுக்கு தள்ளப்பட்டு இயற்கை பானங்களின் விற்பனை களைகட்சி வருகிறது.