தவறான அறுவைச் சிகிச்சை... ஆம்புலன்சில் வந்து ஆட்சியரிடம் மனு கொடுத்த இளம்பெண்
நெல்லை: திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தவறான அறுவைச் சிகிச்சையால் படுத்த படுக்கையாக உள்ள பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆம்புலன்சில் வந்து மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் மு.கருணாகரன் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
அப்போது அங்கு ஆம்புலன்ஸ் ஒன்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த ஆம்புலன்சில் தென்காசி ரயில்வே பீடர் சாலையைச் சேர்ந்த மகேஷ் அம்ஜத் குமார் தனது மனைவி கார்த்திகைச் செல்வி (26) மற்றும் உறவினர்கள் வந்திறங்கினர்.
பின்னர் மகேஷ் ஆட்சியரிடம் தனது மனுவை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது :-
தென்காசியில் டீ கடையில் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறேன். எனது மனைவி கார்த்திகைச்செல்வி தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்தவர். எங்களுக்கு இசக்கிசிரீகரன் என்ற மகன் உள்ளார். 2 ஆவதாக கருத்தரித்தது முதல் தென்காசி அரசு மருத்துவமனையில் கார்த்திகைச்செல்வி சிகிச்சைப் பெற்று வந்தார். 9-7-2014 இல் எங்களுக்கு 2 ஆவதாக ஆண்குழந்தை பிறந்தது.
அன்று மாலையில் எனது மனைவிக்கு குடும்பநல அறுவைச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதிலிருந்து சில நாள்களில் கார்த்திகைச் செல்விக்கு அதிக வயிறுவலி ஏற்பட்டது. அப்போது ஸ்கேன் எடுத்து பார்த்தபோது அறுவைச் சிகிச்சையின்போது சிறுநீரகக் குழாயை இணைத்து தையல்போட்டுள்ளதாக மருத்துவத் துறையினர் தெரிவித்தனர்.
இதையடுத்து மேல்சிகிச்சைக்காக 10-8-2014 இல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கார்த்திகைச் செல்வியைச் சேர்த்தோம். ஆனால், அங்கு உடனடியாக மறு அறுவைச்சிகிச்சை செய்யாததால் கார்த்திகைச்செல்வியின் அச்சத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் தனியார் மருத்துவமனையில் சேர்த்து வட்டிக்கு கடன்வாங்கி பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்து 50 சதவிகிதம் அபாய கட்டத்தைத் தாண்டிய நிலைக்கு கொண்டு வந்துள்ளோம்.
மருத்துவர்களின் அலட்சியத்தால் மிகுந்த பணவிரயமும், மனஉளைச்சலும் அடைந்து கைக்குழந்தையுடன் தவித்து வருகிறேன். எனவே, இதுகுறித்து விசாரித்து எனது மனைவிக்கு நல்ல சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சார்பில் மருத்துவ உதவித்தொகை கிடைக்கவும் மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும்' என இவ்வாறு அந்த மனுவில் மகேஷ் தெரிவித்திருந்தார்.
.
மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர், ஆம்புலன்சில் ஏறி கார்த்திகைச் செல்விக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என அவர் உறுதியளித்தார்.