தீபாவளி... 'தல' தீபாவளி
திருமணமாகி தல தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு போன ஒன் இந்தியா தமிழ் வாசகரின் சந்தோச தருணத்தை நம்மிடையே பகிர்ந்து கொண்டுள்ளார்.
சென்னை: எத்தனையோ தீபாவளி கொண்டாடினாலும் திருமணத்திற்குப் பின்னர் தங்கள் துணையுடன் கொண்டாடும் முதல் தீபாவளியை யாராலும் மறக்க முடியாது.
புதிதாக திருமணம் ஆன ஆண்களுக்கு தல தீபாவளி என்பது, வாழ்க்கையில் என்றுமே மறக்கவே முடியாத தீபாவளியாக அமைந்து விடும். ஏன் என்றால் திருமணத்திற்கு முன்பு எத்தனையோ தீபாவளியை பெற்றோர்கள், உறவினர்களுடன் கொண்டாடி இருப்போம். அதில் சந்தோசம் இருக்குமே தவிர முழு மன நிறைவு நிச்சயமாக இருக்காது. திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் தீபாவளி ஒரு மறக்க முடியாத அனுபவமாக அமைந்து விடும்.
ஆணோ, பெண்ணோ நட்பு வட்டாரத்தில் யாருக்காவது திருமணமாகி, அவர்கள் தலை தீபாவளி கொண்டாடினால், அவ்வளவுதான், பேச்சிலர்களாக இருப்பவர்களுக்கு அந்த ஏக்கத்திலேயே பண்டிகை ருசிக்காமல் போய்விடும். நாங்களும் தலை தீபாவளி கொண்டாடுவோம் அன்னைக்கு பாருங்கடா என்று மனதிற்குள் (வடிவேல் மாதிரி) நினைத்துக்கொள்வார்கள் தல தீபாவளி கொண்டாட முடியாதவர்கள்.
வெளியூரில் வேலை பார்ப்பவர்களாக இருந்தால் கேட்கவே வேண்டாம். ஏனென்றால், தீபாவளி கொண்டாட சொந்த ஊருக்கு செல்லும் போது சரியாக ஊருக்குள் நுழையும் போதுதான், நண்பர்கள் யாராவது தலை தீபாவளிக்கு மாமனார் வீட்டுக்கு கிளம்பிச் செல்வார்கள். அல்லது தோழி அம்மா வீட்டிற்கு தலை தீபாவளி கொண்டாட வந்திருப்பார்கள். அப்போது சிங்கிளாக இருப்பவர்களைப் பார்த்து உறவினர்கள் வேண்டுமென்றே, நீயும்தான் வருஷா வருஷம் தீபாவளிக்கு வந்துட்டுப் போறே. எப்போதான் ஜோடியோட தல தீபாவளி கொண்டாடப்போறே? என்று நக்கல் அடிப்பார்கள். அதைக் கேட்டு பாதிக்கப்பட்ட அந்த நபர் அப்படியே வந்த வழியே போய்விடலாமா என்று கூட நினைப்பார்கள்.
பல ஆண்டு ஏக்கத்திற்குப் பிறகு ஒருவழியாக, திருமணமாகி தல தீபாவளி கொண்டாட மாமனார் வீட்டுக்கு போன அந்த சந்தோச தருணத்தை நம்மிடையே பகிர்ந்து கொண்டுள்ளார் நமது ஒன் இந்தியா தட்ஸ் தமிழ் வாசகர் ஒருவர். நீங்களும் உங்களின் அனுபவங்களை எங்களிடையே பகிர்ந்து கொள்ளுங்கள்.
தல தீபாவளி
தல தீபாவளிக்கு மாமனார் வீட்டில் இருந்து அழைக்க வரவே, ஆஹா நிறைய சீர் வாங்கி மாமனார் தலையில் மிளகாய் அறைத்து விடலாம் என்று நினைத்துக் கொண்டே கையில் பைசா எதுவும் வைத்துக்கொள்ளாமல் முதல்நாளே கிளம்பினேன். தீபாவளி அன்று நடு ஜாமத்தில் அதாவது 3 மணிக்கு எழுப்பி விட்டார்கள். மனைவின் கடோத்கஜன்கள் மாதிரி இருக்கும் தம்பிகள். வாங்க மாமா வந்து எண்ணெய் வச்சுக்கங்க என்று இரண்டு பக்கமும் நின்று கொண்டு வைத்து எண்ணை தேய்த்துவிடச் சொல்லவே எனக்கு திடீரென மனதில் வெற்றிக் கொடி கட்டு படத்தில் வரும் பார்த்திபன் வடிவேல் (ஆடு, அரிவாள்) காமெடிதான் ஞாபகத்துக்கு வந்தது.
சூடாக இட்லி... மட்டன் கறி
வெது வெதுப்பாக வெந்நீர் வைத்து குளித்து முடித்து சாமி கும்பிட்டு முடித்தவுடன், உடுத்திக் கொள்ள புதுத் துணி மணிகள் கொடுத்தார்கள். ஒரு வழியாக எல்லாத்தையும் போட்டுக்கொண்டு, உட்காரவே ஆள் உயரத்திற்கு வாழை இலை பரப்பி, நமக்காக ஸ்பெஷலாக செய்த மட்டன் குழம்பு... சூடாக சிலபல இட்லிகளை வைத்தார்கள்.
தடபுடல் விருந்து
வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு, அமர்ந்த உடனே மத்தியானம் வந்து விட்டது. மறுபடியும் நாட்டுக்கோழி குழம்பும், சிக்கன் 65, கோழி பிரியாணி சேர்த்து சாப்பிட்டு நிமிர இரவு விருந்து ஆரம்பித்து விட்டது. இப்படியே 3 நாளும் பலகாரங்களும், சாப்பாடும் சாப்பிட்டது போக அவ்வப்போது பட்டாசும் வெடித்தேன்.
நாங்க சிவகாசிகாரங்க எங்களுக்கே பட்டாசா? என்று மனதில் நினைத்துக் கொண்டே... பட்டாசு விட்டு தீபாவளியை கொண்டாடி முடித்தேன்.
தீபாவளி சீர்
3 நாளும் விருந்து ஃபுல் கட்டு கட்டியதில் வயிற்றில் ஏ.ஆர் ரகுமான் பின்னணி இசையில் சத்தம் கேட்க, என் மனைவியின் பாட்டியோ, தீபாவளி லேகியத்தை கையோடு கொண்டு வந்து கொடுத்து சாப்பிட சொன்னார்கள். அப்பாடா ஒரு வழியாக மாமியார் வீடு விருந்து முடிந்தது... எங்க வீட்டுக்குப் போகவேண்டுமே என்று நினைவுக்கு வர, கையில் பெரிய சீர் தட்டினை கொண்டு வந்து நீட்டினார்கள்.
வெயிட் தீபாவளி பாஸ்
புத்தாடை, பலகாரங்கள், கூடவே தங்க மோதிரம், செயின் என்று கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது தீபாவளி சீர். ஆஹா வெயிட் தல தீபாவளிடா என்று நினைத்த போதே, என் மனைவி போட்டாளே ஒரு கொக்கி, அது வேறு ஒன்றுமில்லை, தல தீபாளிக்கு நமக்கு செஞ்சவங்களுக்கு நாமளும் பதில் மரியாதை செய்யனும், அதனால, நாமளும் அவங்களுக்கு ஏதாவது துணிமணி? எடுத்து தரனும். உங்க மரியாதையை காப்பாத்துங்க! என்று சொல்லுவா!. நாமும் வேறு வழியில்லாமல் நம்முடைய மரியாதையை காப்பாற்ற நம் டெபிட் கார்டை தேய்த்து மாமனார், மாமியார், மச்சினன், மச்சினிச்சி என எல்லோருக்கும் துணிமணி எடுத்துக் கொடுத்துவிட்டு தலை தீபாவளியை ஜாலியாக கொண்டாடிவிட்டு ஊருக்கு சொந்த ஊர் திரும்பினேன். அப்ப உங்க தல தீபாவளி எப்படி பாஸ்?