கோஷ்டிகள் இணைப்பு... அலட்டிக் கொள்ளாத ஓபிஎஸ்... காரணம் அந்த ஆபரேஷன்தான்!
அதிமுக கோஷ்டிகள் இணைப்பு தொடர்பாக ஆயிரம் முட்டுக்கட்டைகள் இருந்தாலும் அதைபற்றியெல்லாம் அலட்டாமல் ஓபிஎஸ் வலம் வருவது ஆச்சரியத்தை தருகிறது.
சென்னை: அதிமுக கோஷ்டிகள் இணைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு தினகரன் கோஷ்டி முட்டுக்கட்டை போட்டாலும் எல்லாமும் நடந்துவிடும் என்ற நம்பிக்கையில் ஓபிஎஸ் வலம் வருவதற்கு காரணமே 'அந்த ஆபரேஷன்கள்' மீதான நம்பிக்கைதானாம்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, அதிமுக, 3 அணியாகப் பிரிந்து நிற்கிறது. இதில் டிடிவி தினகரன் அணியும், ஓபிஎஸ் அணியும் நேரடியாக மோதலில் ஈடுபட்டு ஓய்ந்து போய் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி தங்களுக்குள் அதிகாரத்தைப் பங்கிட்டுக்கொள்ள முயற்சித்து வருகின்றன.
இதன் முதல் கட்டமாக இரண்டு அணியினரும் குழுக்கள் அமைத்துள்ளனர். ஆனால் குழுக்கள் அமைந்த வேகத்திலேயே இரண்டு அணியினரும் தங்களுக்குள் கடுமையாக மோதி வருகின்றன.
அதிமுக பொறுப்பு கிடைக்கனுமே..
முதல்வர் பதவி அல்லது முக்கிய இலாகா கிடைக்காமல் போனாலும், அதிமுக தலைமை பொறுப்புக்கு வந்துவிடவேண்டும் என்பதில் உறுதி காட்டுகிறாராம் ஓபிஎஸ். அசைக்கமுடியாத மன்னார்குடி உறவுகளின் அதிகாரத்தை அசைத்து, அவர்களை முழு மூச்சாக எதிர்த்துவிட்ட பிறகு தலைமை பொறுப்பில் தாம் இல்லாவிட்டால் நன்றாக இருக்காது என்பது ஓபிஎஸ் எண்ணம்.
அதீத நம்பிக்கை
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சசிகலா தரப்பை அதிமுகவில் இருந்து ஒரேயடியாக ஒதுக்கிவிட ஓபிஎஸ் மிக சாதுரியமாக காய் நகர்த்தி வருகிறார். மத்திய அரசின் சப்போர்ட் முழுமையாக இருப்பதால் தன்னால் எதையும் சாதித்துவிட முடியும் என்பது அவரின் திட்டமாம்.
சசி கணக்கு
இதனிடையே சிறையில் இருந்தவாறே சசிகலாவோ வேறு கணக்குப் போடுகிறார்; அதை ஸ்லீப்பர் செல்கள் மூலம் தனது ஆதரவாளர்களுக்கு தெரிவித்தும் வருகிறார் என்கிறார்கள் மன்னார்குடி உறவுகள். இப்போதைக்கு சசிகலாவின் மனம் அறிந்து செயல்படுபவர் திவாகரன் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்.
சசிதான் பொதுச்செயலர்
சிக்கலான இந்த நேரத்தில் மிகவும் சாதுர்யமாக டிடிவி தினகரனுக்கு எதிராக காய்நகர்த்துகிறது திவாகரன் தரப்பு. எஞ்சியிருக்கும் தங்களின் விசுவாசிகளான அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி சிலரை ஒருங்கிணைத்து ரகசிய கூட்டங்களை நடத்தி, தினகரனை எளிதாக ஒதுக்கிவிட்டது. அதே நேரத்தில் சசிகலாதான் அதிமுகவின் பொதுச் செயலாளர் என்பதில்,அவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
கடுமைக்கு காரணம்
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டவர்களிடம் திவாகரன் ஆதரவு அமைச்சர்கள் 4 பேரும் நேரடியாகவே வலியுறுத்தியுள்ளனர். இதை உணர்ந்துதான் நிபந்தனைகளில் கடுமை காட்டுகிறதாம் ஓபிஎஸ் கோஷ்டி.
பாஜக விருப்பம்
அதிமுகவில், ஓபிஎஸ்ஸுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இணைப்பு நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் மேலிட தலைமையின் விருப்பம். தமிழக அளவில், ஓபிஎஸ் அரசியலிலும் ஆட்சியிலும் முக்கிய இடத்தில் இருந்தால், அது ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட பல விவகாரங்களில் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று கணக்குப் போட்டுள்ளனர் பாஜக தலைவர்கள். அதுதான் ஓபிஎஸ் அரசியலில் சக்தி பெறுவதற்கு மிகவும் அடிப்படையான காரணமே.
ரெய்டு ஆபரேஷன்
இந்தக் கணக்கிற்கு ஒத்து வராத அமைச்சர்கள், யாராய் இருந்தாலும் அவர்கள் மீது ரெய்டு நடத்தப்படும் என்று எச்சரிக்கையும் வந்துள்ளது என்று படபடக்கிறார்கள் அமைச்சர்கள் தரப்பில். அதன் ஒரு சாம்பிள்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான அதிரடி ஐடி ரெய்டு.
ஓபிஎஸ் நம்பிக்கை
ஓபிஎஸ்ஸை எதிர்த்தால் தங்களிடம் சிக்கியுள்ள 10 அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டுக்கு பாய வருமான வரித்துறை ரெடியாகவே உள்ளதாம். இந்த ஆபரேஷன்களின் நம்பிக்கையில்தான் எதையும் அலட்டிக் கொள்ளாமல் வலம் வருகிறாராம் ஓபிஎஸ்.