காவிரி வழக்கு.. உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்க வேண்டும்: வைகோ
காவிரி வழக்கினை உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என வைகோ கூறியுள்ளார்.
கோவை: காவிரி விவகாரத்தில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுவிட்டதால், அதற்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்க வேண்டுமென்றால் உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமர்வு காவிரி வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைக் சந்தித்த வைகோ சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அண்ணாவின் மறைவிற்கு பிறகு திமுகவை கண்ணைக் இமைகள் காப்பது போல எண்ணற்ற இலக்கியங்களை சாகா வரம்பெற்ற கருவூலங்களாக மாற்றியவருமான கருணாநிதியின் பிறந்த நாள் இன்று. அவருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். அவரது கணீரென்ற குரல் மீண்டும் ஒலிக்க இயற்கை அன்னையை பிரார்த்திக்கிறேன்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அரசிதழில் வெளியிட்டதை முதல்வரும், அமைச்சர்களும் வெற்றி என்று சொல்கிறார்கள். ஆனால் நாம் வஞ்சிக்கப்பட்டுவிட்டோம். ஏமாற்றப்பட்டுவிட்டோம். நடுவர் மன்ற தீர்ப்புக்கு மாறாகவும் அந்த தீர்ப்பில் என்ன பாதுகாப்புகள் இருந்ததோ, குறிப்பாக அணைகள் பாதுகாப்பு, தண்ணீர் திறப்பதை வாரியம் தான் முடிவு செய்யவேண்டும், மத்திய தொழிற் பாதுகாப்பு படைகளின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் எல்லாம் அகற்றப்பட்டுவிட்டன.
தீர்ப்பை முழுமையாக படித்தவன் என்ற முறையில் சொல்கிறேன், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் அமர்வு, நீதியை குழிதோண்டி புதைத்துவிட்டு ,தமிழகத்திற்கு ஓரவஞ்சனை செய்து தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.
நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை மாற்றி விட்டார்கள். இதற்கு தீர்வு, எதிர்காலத்தில் 9 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் மேகதாது குறுக்கே அணைகள் கட்டுவதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியாது.
எதிர்காலத்தில் காவிரியில் தண்ணீர் வரவில்லையென்றால் டெல்டா பகுதிகள் எல்லாம் பாலைவனமாக மாறி, விவசாயிகள் நிலத்தை விற்று, அதை கார்ப்ரேட் கம்பெனிகள் வாங்கி, எரிவாயு உள்ளிட்ட பல கேடுகளை விளைவிக்கின்ற திட்டங்கள் எல்லாம் தமிழகத்திற்கு கொண்டு வருவார்கள். பல நல்ல திட்டங்கள் தமிழகத்திற்கு வரட்டும். அதன் மூலம் தொழில் வளம் பெருகட்டும். அதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால் மத்திய அரசு பல கேடு விளைவிக்கின்ற திட்டங்களைக் கொண்டு வந்து தமிழகத்தை பாலைவனமாக மாற்றி வருகிறது.
ராஜராஜ சோழனின் சிலை உள்ளிட்ட பல சிலைகளைக் மீட்டு கொண்டு வந்த ஐ.ஜி.பொன்மாணிக்கவேலை நான் மிகவும் பாராட்டுகிறேன். இவர் போன்ற பல நல்ல காவல்துறை அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுபோன்ற நல்ல விஷயங்களைக் செய்தால் நாங்கள் பாராட்டுவோம். எனவே எல்லாவற்றையும் எதிர்க்க மாட்டோம்.
இவ்வாறு மதிமுக பொதுசெயலாளர் வைகோ கூறினார்.