தீ விபத்து ஒரு புறம்.. 1300 பணியாளர்களுக்கும் மாத சம்பளத்தை வழங்கிய சென்னை சில்க்ஸ் நிர்வாகம்!
சென்னை: சென்னை சில்க்ஸ் கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நேற்று மாத சம்பளத்தை அந்நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும் இந்தக் கிளையில் உள்ள அனைத்து பணியாளர்களும் மீதமுள்ள, 17 கிளைகளுக்கு பிரித்து பணியமர்த்தப்பட்டனர்.
தி சென்னை சில்க்ஸ் என்ற துணிக்கடை சென்னை, மதுரை உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ளன. இக்கடை திநகரில் மிகவும் பிரபலமான கட்டடமாகும். இங்கு துணிக்கடையும் ஸ்ரீகுமரன் தங்கமாளிகையும் அருகருகே உள்ளது.
இந்நிலையில் தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸில் நேற்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தரை தளத்தில் பிடித்த தீ ஏழு மாடிக்கும் பரவியது. தீயணைப்புப் படையினர் தீயை அணைக்க தொடர்ந்து முயற்சி செய்தும் 36 மணி நேர போராட்டத்திற்குப் பிறகே தீயை கட்டுப்படுத்த முடிந்தது.
இதனிடயே இன்று அதிகாலை 3.20 மணி அளவில், சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் வலதுபுறம், 7வது தளத்திலிருந்து 2வது தளம் வரை பெரும் சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதையடுத்து கட்டிடத்தின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்த பின்னர் கட்டிடம் முழுமையாக இடிக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
தற்போது தீ விபத்தை தொடர்ந்து கட்டிடம் இடிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் அந்தக் கடையில் பணிபுரிந்த ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியது. மேலும் வீட்டு வாடகை, மின் கட்டணம், பள்ளி கட்டணம் உள்ளிட்ட தேவைகளுக்கு என்ன செய்யப்போகிறோம் என ஊழியர்கள் வேதனை அடைந்தனர்.
இந்நிலையில் தி சென்னை சில்க்ஸ் தி.நகர் கிளையில் பணிபுரிந்து வந்த 1300 பணியாளர்களுக்கும் நிர்வாகம் நேற்று சம்பளத்தை வழங்கியுள்ளது. மேலும் இந்தக் கிளையில் உள்ள பணியாளர்களை மீதமுள்ள 17 கிளைகளுக்கு பிரித்து பணியமர்தப்பட்டுள்ளனர். தொழிலாளர்களின் மன உளைச்சலை குறைக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.