ஆர்கே நகர் இடைத்தேர்தலை நடத்துவதா? ஒத்திவைப்பதா? - தேர்தல் ஆணையம் நாளை முடிவு
ஆர்கே நகர் இடைத்தேர்தலை நடத்துவதா ஒத்திவைப்பதா என்பது குறித்து தேர்தல் ஆணையம் நாளை முடிவு செய்யும் என தெரிகிறது.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலை நடத்துவதா ஒத்திவைப்பதா என்பது குறித்து தேர்தல் ஆணையம் நாளை முடிவு செய்யும் என தெரிகிறது. நாளை மாலை நடைபெறும் கூட்டத்திற்கு பின் தலைமைத் தேர்தல் ஆணையர் முடிவை அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்கே.நகர் தொகுதிக்கு வரும் புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்களின் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் அமைச்சரின் வீடு உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் வரை ஆர்கே நகரில் செலவு செய்ததற்கான ஆவணம் சிக்கியது.
மேலும் அமைச்சருகளும் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்கான பணத்தை பெற்றது அம்பலமாகியுள்ளது. இதுதொடர்பான சோதனை அறிக்கையை வருமான வரித்துறை இன்று சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவிடம் இன்று வழங்கியது.
இதையடுத்து அறிக்கையுடன் டெல்லி சென்ற விக்ரம் பத்ரா அதனை தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்ததாக தெரிகிறது. இந்நிலையில் நாளை மாலை மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி ஆலோசனை நடத்தவுள்ளார்.
மாலை 4.30மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்தவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.