'ஹாய் டிரைவர் .. ஹவ் ஆர் யூ'.. பேருந்து கண்ணாடியை உரசியபடி நின்ற யானைகள்.. பீதியில் உறைந்த பயணிகள்!
சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் பெண் யானை ஒன்று, தனது குட்டியுடன் அரசு பேருந்தை வழிமறித்து நின்றதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன.
Recommended Video
இந்த காட்டு யானைகள் தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நடமாடுவது வழக்கம்.
ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை முடக்க... மத்திய அரசுக்கு சீமான் வக்காலத்து -மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
சத்தியமங்கலம்
இந்த நிலையில் இன்று அரசுப்பேருந்து ஒன்று 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தாளவாடி மலைப்பகுதியில் இருந்து சத்தியமங்கலம் சென்றது. அந்த பேருந்து சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. தமிழக கர்நாடக எல்லையில் உள்ள காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது.
குட்டியுடன் வந்த யானை
அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பெண் யானை ஒன்று, தனது குட்டியுடன் தேசிய நெடுஞ்சாலையில் ஜாலியாக நடந்து வந்தது. திடீரென காட்டு யானை குட்டியுடன் வருவதை கண்ட வாகன ஓட்டிகள் யானையைக் கண்டு அஞ்சியபடி வாகனங்களை அடுத்தது நிறுத்தினார்கள் இதேபோல் சத்திய மங்கலம் நோக்கி சென்ற பேருந்தும் நிறுத்தப்பட்டது.
கண்ணாடியை உரசியது
ஆனால் தாய் யானையும், அந்த குட்டி யானையும் வாகனங்களை பற்றி கவலைப்படாமல் ஜாலியாக அரசு பேருந்தை நோக்கி வந்தது. இதனை தொடர்ந்து அந்த காட்டு யானை பேருந்தின் முன்புறம் நின்றபடி தனது தும்பிக்கையால் கண்ணாடியை உரசியது. யானை பேருந்தின் முன்பு நின்றபடி கண்ணாடியில் உரசுவதை கண்ட பேருந்தில் உள்ளே இருந்த பயணிகள் அச்சமடைந்தனர்.
''கணேசா கணேசா''
பீதியில் உறைந்த பயணிகள் ''கணேசா கணேசா'' என யானையை கும்பிட்டனர். சிலர் அதனை உள்ளே இருந்து விரட்ட முயன்றனர். இதைத்தொடர்ந்து காட்டு யானை பேருந்தில் முன் புறத்தில் இருந்து விலகி ஓரமாக பேருந்தை கடந்து சென்றது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் நிம்மதியடைந்தனர். இதைத்தொடர்ந்து பேருந்து புறப்பட்டு சென்றது. அங்கு நின்று கொண்டிருந்த மற்ற வாகனங்களும் புறப்பட்டு சென்றன.
வனத்துறையினர் அறிவுறுத்தல்
வனப்பகுதி என்பதால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி சாலையை கடந்து செல்கின்றன. இதனால் அந்த பகுதியில் செல்லும் விலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது என்று வனத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் வாகன ஓட்டிகள் சிலர் விலங்குகளை தொடர்ந்து தொந்தரவு செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.