கேரளா பகுதியிலிருந்து குரங்கணி வனத்திற்குள் வந்த மாணவிகள்.. தமிழக வனத்துறையினர் தகவல்
வனத்துறையின் அனுமதி பெறாமல் மலையேறும் பயிற்சிக்கு சென்றதே மாணவிகள் உயிரிழக்க காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
தேனி: மலையேறும் பயிற்சிக்கு அழைத்துச் சென்றவர்கள் விதிகளை மீறி தமிழக வனத்துறையினரிடம் அனுமதி பெறாமல் சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதுவே மாணவிகள் உயிரிழக்கவும், காயமடையவும் காரணமாகியுள்ளது.
போடியில் இருந்து 12 கிமீ தொலைவில் குரங்கணி மலைப்பகுதி உள்ளது. நேற்று தீவிபத்து நடந்த கொழுக்குமலை மலைப்பகுதி கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ளது.
கொழுக்குமலை சுற்றுலாத்தலம் மட்டுமின்றி மலையேற்றப் பயிற்சி பெறுவதற்கும் சிறந்த இடமாக உள்ளது. இங்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் மலையேற்ற பயிற்சிக்கு வருகின்றனர்.
நேற்றைய தினம் மலையேற்றப் பயிற்சிக்கு வந்தவர்கள் மாணவிகள் வனத்துறை அனுமதியின்றி மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அவர்கள் கேரளா வழியாக குரங்கணிக்கு இறங்கி வரும் போது இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். இதுவே அசம்பாவிதம் நடக்க முக்கிய காரணமாக உள்ளது.
20 நாட்களாக காட்டுத்தீ
தேனியில் இருந்து மூணாறு வழித்தட மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 25க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளன. இங்கு ஏராளமான வன விலங்குகள், தேக்கு, சந்தனம் உள்ளிட்ட விலை உயர்ந்த மரங்கள் உள்ளன. தமிழக, கேரளாவை இணைக்கும் வகையில் உள்ள இந்த வழித்தட பகுதிகளில் கோடை வெயில் காரணமாக, போடிமெட்டு அருகே அகமலை, மராக்காமலை, குரங்கணி பகுதிகளில் உள்ள காடுகளில் கடந்த 20 நாட்களாக இரவு, பகலாக காட்டுத்தீ பரவி வந்தது.
சிறுமிகளும் மலையேற்றம்
இந்நிலையில் சனி, ஞாயிறு விடுமுறையையொட்டி சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சென்னிமலை பகுதிகளைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஐடி ஊழியர்கள், கல்லூரி மாணவிகள், மலையேற்றப் பயிற்சியாளர்கள், தங்கள் குடும்பத்துடன் 36 பேர் போடி அருகேயுள்ள குரங்கணிக்கு சனிக்கிழமை இரவு வந்தனர். இதில் 8 பெண்கள், 3 சிறுமிகள் இருந்தனர்.
தமிழகம் வழியாக இறங்கியது ஏன்?
இவர்கள் நேற்று காலை கேரள மாநிலம், மூணாறு சென்றனர். மாலையில் அங்கிருந்து கொழுக்குமலை வழியாக குரங்கணிக்கு அடர்ந்த வனப்பகுதி வழியாக கீழிறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது வழியில், திடீரென பயங்கர காட்டுத்தீ பற்றியது. காட்டுத்தீக்குள் சிக்கிக் கொண்ட இவர்கள், அதில் இருந்து தப்ப வழி தெரியாமல் வனத்திற்குள் அங்குமிங்கும் சிதறி ஓடினர். பதற்றத்துடன் ஓடியதில் பலர் வழுக்கி விழுந்தனர்.
விரைந்த மீட்பு படையினர்
காற்று பலமாக வீசியதால் வனத்திற்குள் தீ வேகமாக பரவியது. தீவிபத்து நடந்த பகுதி, மலையடிவாரத்தில் காட்டுக்குள் பற்றி எரிந்த தீயின் ஜூவாலைகள், அங்கிருந்த கோரைப்புற்களில் பற்றி விறுவிறுவென பரவியது.
காட்டுத்தீயில் இவர்கள் சிக்கிக் கொண்ட தகவலை அறிந்த கொழுக்குமலையை சேர்ந்த பெண் ஒருவர் குரங்கணி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து குரங்கணி போலீசார், போடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சிக்கிக்கொண்ட மாணவிகள்
தேனி, கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி பகுதிகளில் இருந்து ஏராளமான தீயணைப்பு வாகனங்கள், 20க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மலையடிவாரமான குரங்கணிக்கு விரைந்தன. அருகிலுள்ள மலைக்கிராம மக்களும் கொழுக்குமலை பகுதிக்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் மீட்பு
பலர் டோலி மூலம் காயங்களுடன் மீட்டனர். அவர்களுக்கு போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தீயில் சிக்கிய அதிர்ச்சியில் இருந்து அவர்கள் மீளமுடியாத நிலையில் உள்ளனர்.
தீயில் சிக்கியிருப்பவர்களை மீட்பதற்கான நடவடிக்கையில் தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் தொடர்ந்து ஈடுபட்டனர்.
விதிமீறும் நிறுவனங்கள்
வனப்பகுதிக்கு மலையேறும் பயிற்சிக்கு அழைத்து செல்லும் நிறுவனங்கள் குடும்பத்துடன் வரலாம் என்று அறிவித்து அதற்கான கட்டணத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். வனத்துறை அனுமதி பெற்றுள்ளோம் என்று முதலில் கூறி விட்டு பின்னர் வேறு வழியாக அழைத்து செல்கிறோம் என்று தெரிவிப்பது வாடிக்கையாகி வருகிறது.
எச்சரித்திருக்கலாம்
இதேபோல சம்பவம்தான் நேற்றும் நடந்துள்ளது. மூணாறு சென்றவர்கள் தமிழக வனத்துறையிடம் அனுமதி பெறாமல் குரங்கனி பகுதியில் இறங்கியதே காரணம் என்று தேனியில் வனக்காவலராக பணியாற்றுபவர்கள் தெரிவித்தனர். முறையான அனுமதி பெற்றிருந்தால் கடந்த வார தீ விபத்துகளை கருத்தில் கொண்டு முன்பே எச்சரித்திருக்க முடியும் என்றும் அவர்கள் கூறினர்.
உயிரிழப்புக்கு காரணம்
திடீரென்று நேற்று பிற்பகலில் பற்றிய தீ காற்றின் தீவிரத்தால் அதிகமாக பரவியுள்ளது. தீ பரவியதை பார்த்ததும் பதற்றத்தில் ஓடியவர்களே கீழே விழுந்து உயிரிழந்துள்ளனர். மலையிடுக்குகளில் சிக்கி பாதுகாப்பாக இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறு காயங்களுடன் தப்பிவிட்டனர் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.