இடது கை ஆட்காட்டி விரலில் இனி கோடு இல்லை... ‘திக்’ மை... தேர்தல் ஆணையம் அதிரடி
சென்னை: தேர்தலில் ஓட்டுப்போட்டு கையில் மை வைத்த மறுநிமிடமே அதை அழித்து விட்டு கள்ள ஓட்டு போட போய்விடுவார்கள். இதை தடுக்க இனி இடது கை ஆள்காட்டி விரலில் அடர்த்தியான மை வைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
வாக்காளர்கள் வாக்களித்த பின்னர் அதன் அடையாளமாக முன்பு இடது கை ஆட்காட்டி விரலில் வட்டம் போன்ற புள்ளி அழியாத மையால் வைக்கப்பட்டது. இது உடனடியாக அழிந்து விடுவதாகவும், கள்ள ஓட்டுபோடுவதற்கு வாய்ப்பாக இருப்பதாகவும் தேர்தல் ஆணையத்துக்கு புகார்கள் வரவே, சிறிய கோடுபோல் ஆட்காட்டி விரலில் மை வைக்கும் முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்தது.
இந்த மைக் கோடும் உடனடியாக அழிந்து விடுவதாக ஏராளமான புகார்கள் தேர்தல் ஆணையத்துக்கு வந்தன. எனவே, வாக்காளர்களுக்கு மை வைக்கும் முறையை இனி நடைபெறும் தேர்தல்களில் மாற்றுவதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
பட்டை போன்ற மை
இது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் சமீபத்தில் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. ‘‘வாக்காளர்களுக்கு இடது கை ஆட்காட்டி விரலின் மேற்பகுதியில் இருந்து அடிப்பகுதி வரை ஒரு சிறிய பிரஷின் உதவியுடன் சிறிய பட்டை தீட்டப்படும். இது தற்போது வைக்கப்படும் அடையாள கோட்டைவிட சற்று தடித்து இருக்கும்'' என்று கூறப்பட்டு உள்ளது.
உறுதிபடுத்திய பின் ஓட்டு
அடையாள மை பிரஷால் தீட்டப்பட்டு உள்ளதா? என்பதை ஓட்டுச் சாவடியில் இருக்கும் தேர்தல் அதிகாரி, வாக்காளர் தனது வாக்கை பதிவு செய்வதற்கு முன்பாக உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு இருக்கிறது.
ப்ரஷ்ல அடிப்பாங்க
அடையாள மையை தயாரிக்கும் மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் நிறுவனத்திடம், அடையாள மையை விநியோகம் செய்யும்போது அதனுடன் மையை தீட்டுவதற்கான பிரஷ்களையும் தேர்தல் நடக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பி வைப்பதை உறுதி செய்யவேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.
அழியவே அழியாது
இனி ஓட்டுப் போட்ட பின்னார் திக் மை தீட்டப்படுவதால் எளிதாக அழியாது கள்ள ஓட்டும் போட முடியாது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நம்ம ஆட்கள்தான் கில்லாடிகள் ஆயிற்றே அதற்கும் ஏதாவது வழி கண்டுபிடிக்காமல் இருப்பார்களா என்ன?